இலங்கை தமிழர்களின் நலன் காக்கப்படும்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சம்
தமிழகத்தின் 2022 ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்ட ஆளுநர், தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் நலன் குறித்து உரையாடியுள்ளார்.
ஒவ்வொரு வருட துவக்கத்திலும் தமிழக சட்டப்பேரவை கூடும்போது ஆளுநர் உரையாற்றுவது என்பது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் தொடங்கியது.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வழக்கம் போல தலைமை செயலகத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் ஓமிக்ரான் பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற்றது.
தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கூட்டத்தில் ஆளுநர் ரவி வணக்கம் என்று தமிழில் கூறி தனது முதல் உரையை வாசித்தார்.
இதையடுத்து தமிழக மக்களுக்கு பல்வேறு நலன் திட்டங்கள் குறித்து ஆளுநர் உரையாற்றினார். அப்போது தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் நலனைக் காப்பதில் அரசு உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.. அவர் கூறியதாவது, குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடும் நடவடிக்கை பாயும். விவசாயம் மற்றும் பாதுகாப்பிற்காக எண்ணற்ற நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசை அனுமதிக்க கூடாது என்று அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார். இருமொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக ஆளுநர் ரவி தெரிவித்தார்.
இலங்கை சிறையில் உள்ள 68 மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஆட்சி அமைத்த குறுகிய காலத்திலயே முதல்வர் ஸ்டாலின் நாடு முழுக்க பிரபலம் அடைந்துள்ளது பாராட்டுக்குரியது. கடைசியில் ஆளுநர் ரவி அவர்கள் தமிழ்நாடு சட்டசபையில் முதல்முறையாக பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்து தனது உரையை முடித்து கொண்டார்.