பிரித்தானியாவில் சில வாரங்களில் மீண்டும் பொதுமுடக்கம்? தலைமை மருத்துவ அலுவலர் எச்சரிக்கை
இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோர் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், இன்னும் சில வாரங்களில் இங்கிலாந்து மீண்டும் பொதுமுடக்கத்துக்குள் செல்லவேண்டிய நிலை ஏற்படலாம் என பிரித்தானிய தலைமை மருத்துவ அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இங்கிலாந்து இன்னமும் முழுமையாக கொரோனா பிரச்சினையிலிருந்து விடுபடவில்லை என்று கூறும் பிரித்தானிய தலைமை மருத்துவ அலுவலரான பேராசிரியர் Chris Whitty, இன்னும் ஐந்து முதல் எட்டு வாரங்களுக்குள் மருத்துவர்கள் மீண்டும் கொரோனாவுடன் போராடும் அச்சுறுத்தும் எண்ணிக்கையிலான நோயாளிகளை எதிர்கொள்ளும் நிலைமை உருவாகலாம் என்கிறார்.
யூரோ கால்பந்து போட்டிகளைக் காண மக்கள் குவிந்தது முதல், மீண்டும் 20 வயதுகளிலிருக்கும் ஆண்களிடையே, பெண்களை ஒப்பிடும்போது அதிக அளவில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்துள்ளதாக தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேராசிரியர் Whitty, இப்போதைக்கு கொள்ளைநோய் இரட்டிப்பாகி வருகிறது, நோய் தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கையும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் இரட்டிப்பாகி வருகிறது என்றார்.
இங்கிலாந்தின் பொது சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த இரண்டு வாரங்களில் பெண்களைவிட 10,267 ஆண்கள் கூடுதலாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள். அதாவது, யூரோ கால்பந்து போட்டி துவங்கியதைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.