கிரீஸ் தீவில் பிரித்தானிய பெண்ணை கொள்ளையர்கள் கொன்றதாக கூறப்பட்ட சம்பவத்தில் அதிரடி திருப்பம்
கிரீஸ் தீவில் பிரித்தானிய பெண்ணைக் கொள்ளையர்கள் கொன்றதாக கூறப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பாபிஸ் (Babis) என்னும் Charalambos Anagnostopoulos (33), ஏதென்சிலுள்ள தங்கள் வீட்டில் மனைவி கரோலின் (Caroline Crouch, 20) மற்றும் தனது 11 மாத பெண் குழந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்தபோது முகமூடி அணிந்த சிலர் துப்பாக்கிகளுடன் வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையடிக்கும் முயற்சியின்போது தன் மனைவி கொல்லப்பட்டதாக தெரிவித்திருந்தார். கட்டிப்போடப்பட்டிருந்த பாபிஸையும் குழந்தையையும் பொலிசார் வந்துதான் மீட்டார்கள்.
கிரீஸில் இப்படிப்பட்ட சம்பவங்கள் அபூர்வம் என்பதால், இந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மனைவியை அவருக்கு மிகவும் பிடித்த, அவர் வளர்ந்த Alonnisos தீவில் அடக்கம் செய்த பாபிஸ், ஐயோ என் பிள்ளை தாய் இல்லாமல் வளரவேண்டுமே என்பதை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது என்று கூறி கண்ணீர் விட்டுக் கதறிய காட்சி, காண்போரை கண்கலங்க வைத்தது.
இந்நிலையில், வழக்கில் அதிரடி திருப்பமாக, பாபிஸே தன் மனைவி கரோலினைக் கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளதால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த கரோலின் அணிந்திருந்த கைக்கடிகாரத்தில் பொருத்தப்பட்டிருந்த பிட்னஸ் ட்ராக்கர், ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.
பாபிஸ் தன் மனைவி கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பே அவரது இதயத்துடிப்பு நின்றுபோயிருந்ததை அந்த ட்ராக்கர் காட்டியுள்ளது. சந்தேகமடைந்த பொலிசார் பாபிஸின் கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை சோதிக்க, தான் கட்டிப்போடப்பட்டதாக பாபிஸ் கூறியிருந்த நிலையில், அவர் வீட்டில் அங்கும் இங்கும் நடந்து சென்றதை அதிலுள்ள ட்ராக்கர் காட்டியிருக்கிறது.
மேலும், வீட்டிலுள்ள CCTV கமெராவை சோதித்தபோது, அதிலுள்ள மெமரி கார்டு அகற்றப்பட்டிருந்தது. என்றாலும், அதிலும் ஒரு நேரம் காட்டும் கருவி இருக்க, அதுவும் பாபிஸின் கூற்றுக்கு எதிராகவே சாட்சியம் சொல்லியுள்ளது.
வகையாக மாட்டிக்கொண்ட பாபிஸை பொலிசார் முறைப்படி விசாரிக்க, தான்தான் தன் மனைவி கரோலினைக் கொன்றதாக உண்மையை ஒப்புக்கொண்டார் அவர்.
முந்தைய இரவு தங்கள் இருவருக்குள்ளும் விவாதம் நடந்ததாகவும், அப்போது கரோலின் குழந்தையை தொட்டிலில் வீசிவிட்டு, தன்னிடம் வீட்டை விட்டு வெளியே போ என்று கத்தியதாகவும் தெரிவித்தார் பாபிஸ். கரோலின் தன்னைப் பிரிவதுடன், தன் குழந்தையையும் தன்னிடமிருந்து பிரித்துவிடுவார் என்று அஞ்சி, கோபத்தில் தலையணையை அவரது முகத்தில் அழுத்தி கொலை செய்துவிட்டதாகவும், கொள்ளையர்கள் அவரை கொலை செய்துவிட்டதாக நாடகமாடியதாகவும் தெரிவித்துள்ளார் அவர். பொலிசார் பாபிஸைக் கொலை செய்து காவலில் அடைத்துள்ளார்கள்.
ஏற்கனவே கரோலினின் மரணம் அத்தீவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரது கணவரே கரோலினைக் கொலை செய்து விட்டு நாடகமாடிய சம்பவம் தெரியவர, மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள்.