ஹெலிகாப்டர் விபத்து: உயிருக்காக போராடும் குரூப் கேப்டன் வருண் சிங்
இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் கொல்லப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார்.
பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட வருண் சிங்குக்கு, வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வருண் சிங் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் அகிலேஷ் பிரதாப் சிங்கின் மருமகன் ஆவார்.
இவரது தந்தை கர்னல் கே.பி. சிங் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், சகோதரர் தணுஞ் சிங் கடற்படையில் பணியாற்றி வருகிறார்.
போர் விமானத்தை இயக்கும் திறன்பெற்ற வருண் சிங் 2007-2009ம் ஆண்டு வரை கோரக்பூரில் பணியாற்றியுள்ளார்.
குரூப் கேப்டனின் விதிவிலக்கான துணிச்சலான செயலுக்காக சமீபத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் சௌரிய சக்ரா விருது வருண் சிங்குக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் வருண் சிங் குறித்து டுவிட் செய்துள்ள குடியரசுத் தலைவர், ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து உயிர் பிழைத்த குரூப் கேப்டன் வருண் சிங்கையே என் மனம் நினைத்துக் கொண்டுள்ளது. அவர் விரைவில் குணமடைந்து நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.