90 நிமிடங்கள்... நகரின் 8 இடங்களில் இளைஞரின் கொடுஞ்செயல்
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் நகரின் 8 இடங்களில் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் மொத்த குடிமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அரிசோனா மாநிலத்தின் பீனிக்ஸ் நகரிலேயே குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. மொத்தம் 90 நிமிடங்கள் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 12 பேர் காயங்களுடன் தப்பியதாகவும் பியோரியா காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பியோரியா காவல் துறை அதிகாரிகள் முன்னெடுத்த பத்திரிகையாளர் சந்திப்பில், இந்த தொடர் தாக்குதலை முன்னெடுத்த இளைஞரை கைது செய்துள்ளதாகவும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற வாகனத்தையும் பறிமுதல் செய்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தில் காயமடைந்த 12 பேர்களும் துப்பாக்கி குண்டுக்கு இலக்காகவில்லை எனவும், சிலர் வாகன விபத்தில் சிக்கியதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பேசிய பொலிசார், எங்களுக்கு இவர் பின்னணியில் யார் என்பது தெரியாது, நோக்கம் என்னவென்றும் எங்களுக்குத் தெரியாது என குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி இந்த தாக்குதலை முன்னெடுக்கும் போது இந்த நபர் என்ன நினைத்துக் கொண்டிருந்தார் என்றும் எங்களுக்குத் தெரியாது என குறிப்பிட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், பல்துறை அதிகாரிகள் இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சுமார் ஒன்றரை மணி நேரத்தில் அந்த நபர் பீனிக்ஸ் நகரத்தையே பதற வைத்துள்ளார் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த பகுதியில் இருக்கும் மக்கள் இந்த விவகாரம் தொடர்பில் ஒத்துழைக்க வேண்டும் எனவும், தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ முன்வரவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆண்டின் முதல் 132 நாட்களில் மட்டும் அமெரிக்காவில் 200 கூட்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.