அமெரிக்காவில் வெள்ளைமாளிகை அருகே அதிர்ச்சி சம்பவம்: பதறி ஓடிய மக்கள்
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உணவகம் ஒன்றின் வெளியே மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த பகுதி வெள்ளைமாளிகையில் இருந்து 1.5 கி.மீ தொலைவு மட்டுமே என தெரிய வந்துள்ளது.
20 முறைக்கு மேல் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், உணவகத்தின் முற்றத்தில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த மக்கள் பதறியடித்து வெளியேறியுள்ளனர்.
தொடர்ந்து அந்த தாக்குதல்தாரி அப்பகுதியில் இருந்து மாயமானதாக கூறப்படுகிறது. குறித்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அவசர மருத்துவ உதவிக்குழுவினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.
2018ல் இருந்து இது போன்ற திடீர் தாக்குதல் சம்பவங்கள் அமெரிக்காவின் பல நகரங்களிலும் அதிகரித்துள்ளதாக உத்தியோகப்பூர்வ தரவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
2021ல் மட்டும் இதுவரை இதுபோன்ற 471 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரையில் பதிவான தாக்குதல் சம்பவங்கள் 434 என கூறப்படுகிறது.
தலைநகரத்தை பொறுத்தமட்டில், வறுமையில் வாழும் மக்கள் அதிகம் கொண்ட தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு மாவட்டங்களிலேயே அதிக தாக்குதல் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
அமெரிக்காவில் ஆண்டுக்கு 35,000 மக்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு மரணமடைகின்றனர். சராசரியாக நாளுக்கு 100 பேர்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன.