அமெரிக்காவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய பிரித்தானியரின் பெயர் உட்பட தகவல் வெளியானது
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் துப்பாக்கியுடன் யூத தேவாலயத்தில் புகுந்து பக்தர்களை பணயக்கைதியாக்கிய நபர் பிரித்தானியரான Malik Faisal Akram என பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
குறித்த நபரை சம்பவப்பகுதியிலேயே நேற்று எஃப்.பி.ஐ அதிகாரிகள் சுட்டுக்கொன்று, பணயக்கைதிகளை மீட்டிருந்தனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகளுடன் பிரித்தானிய அதிகாரிகளும் இணைந்து செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சனிக்கிழமை டெக்சாஸ் மாகாணத்தின் Colleyville பகுதியில் அமைந்துள்ள யூத தேவாலயம் ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த 44 வயதான Malik Faisal Akram, சிறையில் இருக்கும் தமது சகோதரியை விடுவிக்க வேண்டு என கோரிக்கை வைத்தார்.
அவருடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், அதிரடியாக தேவாலயத்தினுள் நுழைந்த எஃப்.பி.ஐ அதிகாரிகள் அவரை சுட்டுக்கொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து பணயக்கைதியாக்கப்பட்டிருந்த நால்வரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரியவர உள்ளூர் நேரப்படி பகல் 11 மணியளவில் பொலிசார் சம்பவப்பகுதியை சுற்றிவளைத்துள்ளனர். ஆனால், இரவு 9 மணியளவிலேயே பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ அதிகாரிகளை கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாகிஸ்தான் நாட்டவரான நரம்பியல் நிபுணரை விடுவிக்க அக்ரம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால், குறித்த நரம்பியல் நிபுணர், பாகிஸ்தான் பெண் பயங்கரவாதியான ஆபியா சித்திக் என்று ஊடகங்கள் தெரிவித்தன. அவரை லேடி கொய்தா என்று அமெரிக்க நிர்வாகம் அடையாளப்படுத்தி வருகிறது.
நரம்பியல் விஞ்ஞானியான ஆபியா சித்திக் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளை கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக கடந்த 2010ம் ஆண்டு நியூயார்க் நீதிமன்றம் 86 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
தற்போது அவர் டெக்சாசின் போர்டுவொர்த்தில் உள்ள பெடரல் மெடிக்கல் சென்டர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, டெக்சாஸில் நடந்த சம்பவத்திற்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஆபியா சித்திக்கின் சகோதரர் தெரிவித்துள்ளதை அடுத்து, Malik Faisal Akram பின்னணி தொடர்பில் விசாரிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.