சட்டென்று மாறிய வானிலை... இங்கிலாந்தில் கொட்டித் தீர்த்த கல்மழை: 30 நிமிடத்தில் வெள்ளக்காடான கிராமம்
இங்கிலாந்து கிராமம் ஒன்றில் வெயில் கொளுத்திய நிலையில், கொஞ்சம் குளிர்ச்சியாக இருக்குமே என நீரோடை ஒன்றின் அருகில் சென்று அமர்ந்திருக்கிறது ஒரு குடும்பம்.
Leicestershireஇலுள்ள Kibworth Beauchamp என்ற அந்த கிராமத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில், சட்டென வானிலை மாற, வானம் கருத்து கல்மழை கொட்டத்துவங்கியுள்ளது. படபடவென கண்ணாடி ஜன்னல்கள், கார் மற்றும் கார் கண்ணாடிகள் மீது சுமார் 5 சென்றிமீற்றர் அளவுள்ள பனிக்கட்டிகள் வந்து வேகமாக மோத, அதனால் உருவான சத்தத்தால் மக்கள் திடுக்கிட்டிருக்கிறார்கள்.
காற்று வாங்க வெளியே வந்தவர்கள் பிள்ளைகளை இழுத்துக்கொண்டு வீடுகளுக்குள் தஞ்சம் புக, 30 முதல் 45 நிமிடங்களுக்கு மழையும் கொட்டித் தீர்த்துள்ளது. மழை விட்டபின் வெளியே வந்து பார்த்தால், பலரது கார் கண்ணாடிகளில் கீறல் விட்டுள்ளது. காரின் பரப்பு முழுவதும் பனிக்கட்டிகள் மோதியதில் பள்ளம் பள்ளமாக ஆகிவிட்டிருக்கிறது.
ஆசையாக வாங்கிய கார்கள் நாசமானதை அறிந்து சிலர் வருந்திய அதே நேரத்தில், ஒரு மாதத்தில் பெய்யவேண்டிய மழை அரை மணி நேரத்தில் பெய்ததால் வெள்ளம் பெருக்கெடுக்க, சில முதியோர் இல்லங்கள் முதலான கட்டிடங்களில் தங்கியிருப்போரை வெளியேற்றவேண்டியிருந்தது என்ற செய்தி வந்து எட்ட, அடடா, நாம் எவ்வளவோ மேல் என ஆசுவாசப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.
இந்த கல்மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதம் ஆயிரக்கணக்கில் இல்லாவிட்டாலும் நூற்றுக்கணக்கிலாவது சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் என்கிறார் அப்பகுதியில் வாழும் ஒருவர்.