சொந்த பாதுகாப்புக்கு அமெரிக்காவில் இருந்து அதிகாரிகளை அழைத்து வந்த இளவரசர் ஹரி
தாத்தாவின் இறுதிச்சடங்குகளுக்காக பிரித்தானியா திரும்பியுள்ள இளவரசர் ஹரி, தமது பாதுகாப்புக்காக அமெரிக்காவில் இருந்தே அதிகாரிகளை அழைத்து வந்துள்ளார்.
இளவரசர் ஹரி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் ஹீத்ரோ விமான நிலையத்தில் வந்திறங்கியதும், இங்குள்ள காவல்துறையுடன் தொடர்பு கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அரச குடும்பத்து மூத்த உறுப்பினர் பட்டியலில் இளவரசர் ஹரி இடம்பெறாத நிலையில், அவர் பிரித்தானியாவில் தங்கியிருக்கும் வரையில், இங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளின் கண்காணிப்பில் இருப்பார் என்றே தெரிய வந்துள்ளது.
அரச குடும்பத்து பொறுப்புகளில் இருந்து தாம் விலகுவதாக அறிவித்த நாள் முதலே, இளவரசர் ஹரிக்கு அளிக்கப்பட்டு வந்த முழு நேர பாதுகாப்பானது விலக்கிக்கொள்ளப்பட்டது.
தற்போது அவர் தமது தாத்தாவின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்க வந்துள்ளதால், பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகளின் கண்காணிப்பில் இருப்பார்.
இதனிடையே, சகோதரர் வில்லியம் மற்றும் தந்தை சார்லசுடன் பேச்சுவார்த்தை முன்னெடுத்து வருவதால், 2 மணி நேரம் தாமதமாகவே ஹரி அமெரிக்கா திரும்புவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் இருந்து இளவரசர் ஹரியுடன் அவரது பாதுகாப்புக்கு வந்துள்ள அதிகாரிகள் எத்தனை பேர் உள்ளிட்ட தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
மட்டுமின்றி, அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளும், பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகளும், இளவரசர் ஹரிக்கு நிழலாகவே தொடர்வார்கள் என கூறப்படுகிறது.