தொடங்கியது பனிப்போர்... மகாராணியாரின் செல்லப்பெயரை இளவரசர் ஹரியின் மகளுக்கு வைத்த பிரச்சினையில் எதிர்பாராத திருப்பம்
பிரித்தானிய இளவரசர் ஹரி தன் இரண்டாவது குழந்தைக்கு பிரித்தானிய மகாராணியாரின் செல்லப்பெயரை சூட்டிய பிரச்சினை பெரிதாகி வருகிறது. பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன், இம்மாதம் (ஜூன்) 4ஆம் திகதி, பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். அந்தக் குழந்தைக்கு, லிலிபெட் டயானா மவுண்ட்பேட்டன் விண்ட்சர் என பெயரிட்டார் ஹரி.
தன் பாட்டியாரை கௌரவிக்கும் வகையில் லிலிபெட் என்றும், தன் தாயை கௌரவிக்கும் வகையில் டயானா என்றும் தன் மகளுக்கு பெயரிட்டிருந்தார் ஹரி. ஆனால், லிலிபெட் என்பது மகாராணியாரின் செல்லப்பெயர், அவரது தாத்தா அவருக்கு சூட்டிய அந்த பெயரை வைத்து, மகாராணியாரின் கணவர் இளவரசர் பிலிப் தன் மனைவியை செல்லமாக லிலிபெட் என்றுதான் அழைப்பாராம்.
ஆக, அவரது செல்லப்பெயரை ஹரி தன் மகளுக்கு வைத்ததால் பாட்டிக்கு வருத்தம், அதுவும், பாட்டியாரை கலந்தாலோசிக்காமலே அந்த பெயரை ஹரி தன் மகளுக்கு வைத்துவிட்டார் என பலர் விமர்சித்தனர்.
ஆனால், அப்படி அல்ல, ஹரி தன் பாட்டியாரிடம் கலந்தாலோசித்தபின்னரே அந்த பெயரை தன் மகளுக்கு வைத்தார் என்றும், அதனால் மகாராணியார் மகிழ்ச்சியடைந்துள்ளார் என்றும் ஹரி மேகன் தம்பதிக்கு நெருக்கமானவர்கள் வலியுறுத்தினார்கள்.
இந்நிலையில், அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த மூத்த அலுவலர் ஒருவர் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், ஹரி மேகன் தம்பதியர் தங்கள் குழந்தைக்கு மகாராணியாரின் பெயரை சூட்டுவது தொடர்பாக மகாராணியாரிடம் ஒருபோதும் கேட்கவேயில்லை என உறுதியாக தெரிவித்தார்.
ஆனால், இப்படி இரண்டு பக்கமும் பனிப்போர் போல கருத்து மோதல்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இந்த பிரச்சினையில் எதிர்பாராத திருப்பமாக, ஹரி மேகன் தம்பதியரின் நெருங்கிய தோழியான Omid Scobie என்பவர் பிபிசி தொலைக்காட்சியின் அறிக்கையை சாடியுள்ளார்.
அந்த அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த மூத்த அலுவலர் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வெளியாகி ஒரு மணி நேரமே ஆன நிலையில், அந்த பேட்டியை சாடிய Omid Scobie, ஹரி தனக்கு மகள் பிறந்ததும், முதன்முதலில் அந்த செய்தியை கூறியதே மகாராணியாருக்குதான் என்றார்.
ஹரி மேகன் தம்பதிக்கு நெருக்கமான ஒருவர், ஹரி தன் மகள் பிறந்ததைக் குறித்து மகாரணியாரிடம் கூறும்போதே அவர் தங்கள் மகளுக்கு பாட்டியாரை கௌரவிக்கும் வகையில் அவரது பெயரை சூட்ட விரும்புவதாக தெரிவித்ததாக தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
தன் மகளுக்கு லிலிபெட் என்ற பெயரை வைப்பதை மகாராணியார் விரும்பமாட்டார் என்றால், ஹரி அந்த பெயரை தன் மகளுக்கு சூட்டியிருக்கமாட்டார் என்றார் அவர். இப்படியே ஆளாளுக்கு மகாராணியாரின் பெயரை வைத்து பிரச்சினை பண்ணிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, மகாராணியாரே இந்த பிரச்சினை குறித்து ஏதாவது விளக்கமளித்தால்தான் இந்த பனிப்போர் முடிவுக்கு வரும்போலிருக்கிறது.