தோல்வியில் முடிந்த ஹரியின் பிரித்தானிய பயணம்? வெளியான சிசிடிவி காட்சிகளால் மக்கள் அதிர்ச்சி
பிரித்தானிய இளவரசர் ஹரி தனது தாத்தாவான இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்குக்காக பிரித்தானியா வந்த நிலையில், மீண்டும் குடும்பம் ஒன்று சேரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
இளவரசர் ஹரி, அமெரிக்க கலப்பினப் பெண்ணும் விவாகரத்து பெற்றவருமான ஒரு நடிகையை காதலித்த விடயம் ராஜ குடும்பத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பல முட்டுக்கட்டைகளுக்குப் பின், மேகன் மெர்க்கல் என்னும் பெண்ணை மணந்து ராஜ குடும்பத்துக்குள் கொண்டு வந்தார் ஹரி. ஆனால், மேகன் குடும்பத்துக்குள் வந்த நாள் முதல் பிரச்சினைகள் உருவாகத் தொடங்கின.
பேரும் புகழும் கிடைக்கும் என எதிர்பார்த்து வந்த மேகனால் ராஜ குடும்பத்துக் கட்டுப்பாடுகளை சமாளிக்க இயலாமல், கணவனை குடும்பத்தை விட்டுப் பிரித்துக்கொண்டு அரண்மனையை விட்டே வெளியேறினார் ஹரி.
மகாராணியார் வேதனையில் மூழ்க, மற்றவர்கள் கோபமடைய, அமெரிக்காவில் குடியேறிய ஹரி மேகன் தம்பதி, ராஜ குடும்பத்தை அவமதிக்கும் விதத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தனர்.
இளவரசர் வில்லியம் மனைவி கேட் முதல், ராஜ குடும்ப உறுப்பினர்கள் மீது, இனவெறி குற்றச்சாட்டு முதல் ஏராளம் புகார்களை அடுக்கிக்கொண்டே சென்றார் மேகன்.
ராஜ குடும்ப உறுப்பினர்கள் கோபத்தில் கொந்தளித்தனர். ஆனாலும், மகாராணியார் மட்டும் ஹரி மேகன் குடும்பத்தை மனதார வாழ்த்திக்கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில் மகாராணியாரின் கணவர் இளவரசர் பிலிப் உயிரிழக்க, ஹரி பிரித்தானியா வரவேண்டிய கட்டாயம். அப்படி ஹரி பிரித்தானியா வர, பிரிந்த குடும்பம் மீண்டும் இணையாதா என ராஜ குடும்ப நலம் விரும்பிகள் உற்றுக்கவனித்த வண்ணம் இருந்தார்கள்.
அண்ணன் அண்ணியுடன் ஹரி அளவளாவும் காட்சிகளும், தந்தை மற்றும் அண்ணனுடன் இரண்டு மணி நேரம் ஹரி பேசியதாக வெளியான செய்திகளும் மக்களுக்கு நேர்மறையான எண்ணங்களை உருவாக்கின.
தந்தையையும் அண்ணனையும் சந்தித்த ஹரி, இன்று அவரது பாட்டியாரான மகாராணியாருக்கு பிறந்தநாள் என்பதால், அவரையும் சென்று சந்திப்பார், குடும்பம் மீண்டும் ஒன்று சேரும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், ஏமாற்றத்தையளிக்கும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
ஹரி, தனது பாட்டியாரை சந்திக்காமலே அமெரிக்கா திரும்பிவிட்டார் என்ற செய்திதான் அது. ஹரி, தான் வந்த காரில் வீடு நோக்கி பயணிக்கும் காட்சிகள் வெளியாகி மக்களுக்கு கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
என்ன நடந்தது, தந்தை மற்றும் அண்ணனுடன் இரண்டு மணி நேரம் பேசிய ஹரி என்ன பேசினார், அவர் ஏன் மகாராணியாரை சந்திக்கவில்லை என்ற எந்த கேள்விகளுக்கும் பதில் தெரியாமல் ஏமாந்துபோய் நிற்கிறார்கள் மக்கள், நாமும்தான்!