சிவாஜி கணேசன் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை, அது நடிகர் பிரபு பெயரில் உள்ளது: ஜப்தி உத்தரவுக்கு ராம் குமார் பதில்
சிவாஜி கணேசன் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்று ஜப்தி உத்தரவுக்கு எதிராக மூத்த மகன் ராம் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
ஜப்தி உத்தரவு
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை எனக்கூறி, வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம் குமார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனத்தில் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த் மற்றும் அவரது மனைவி அபிராமி பங்குதாரர்களாக உள்ளனர்.
இந்த நிறுவனம் சார்பில் 'ஜகஜால கில்லாடி’ என்ற படத்தை தயாரித்தனர். அப்போது, படத்தின் தயாரிப்பிற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் இருந்து 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர்.
இந்த கடனை திருப்பி செலுத்தாத நிலையில் 'ஜகஜால கில்லாடி’ படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்தியஸ்தர் கடந்த 2024ம் ஆண்டு மே 4ம் திகதி உத்தரவிட்டார்.
ஆனால், இதுவரை உரிமைகளை வழங்காத நிலையில் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக போதுமான கால அவகாசம் வழங்கியும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவாஜி கணேசன் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்றும், நடிகர் பிரபு பெயரில் தான் உள்ளது என்றும் ராம் குமார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதி, உரிமையாளராக இல்லை என்றால் வீட்டை எப்படி ஜப்தி செய்ய முடியும், ஜப்தி உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யவும், பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். மேலும், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 3ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |