அவர் இறந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny) தொடர்பில் அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரும் ஜனாதிபதி புடினின் கடும் விமர்சகருமான அலெக்ஸி நவல்னி 2014ம் ஆண்டு பதியப்பட்ட மோசடி வழக்கு தொடர்பாக தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவல்னி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கடந்த 3 வாரங்களாக சிறையிலேயே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து சுமார் 17 கிலோ வரையில் உடல் எடை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நவல்னி எந்த நேரத்திலும் மரணமடையக்கூடும் என்று அவரது மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, நவல்னியின் உடல்நிலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவலை சுட்டிக்காட்டி, அவர் இறக்க நேரிட்டால் ரஷ்யா அதற்கான விலையை அளிக்க வேண்டியிருக்கும் என அமெரிக்கா கடுமையாக எச்சரித்துள்ளது.
இந்த விவகாரத்தை எதிர்கொள்ள பல்வேறு சாத்தியமான நடவடிக்கைகள் உள்ளன என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் எச்சரித்துள்ளார்.
நவல்னியின் உடல்நலம் குன்றி வருவதால், 44 வயதான அவருக்கு எந்த நேரத்திலும் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் என மருத்துவர்கள் குழு முன்னர் எச்சரித்திருந்தது.