ரஷ்யாவுக்கு உளவு பார்த்ததாக ஜேர்மனியிலிருந்து நாடு கடத்தப்பட்ட பிரித்தானியர் இவர்தான்: ஒன்பது குற்றச்சாட்டுகள் பதிவு
ரஷ்யாவுக்கு உளவு பார்த்ததாக பிரித்தானியர் ஒருவர் ஜேர்மனியிலிருந்து பிரித்தானியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.
பெர்லினிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் பாதுகாவலராக பணியாற்றியவர் David Smith (57). அவர், ரஷ்ய உளவாளிகளுக்கு பிரித்தானிய அதிகாரிகளின் பெயர்கள் முதலான சில தகவல்களைக் கொடுத்து, அதற்கு பதிலாக பணம் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, கடந்த ஆகத்து மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.
பொலிசார் அவரது வீட்டை சோதனையிட்டபோது, அங்கு ரஷ்ய கொடி, சோவியத் இராணுவ தொப்பிகள் மற்றும் இராணுவ வரலாறு மற்றும் ஏராளமான ரஷ்ய மொழிப் புத்தகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை நாடுகடத்துவதென முடிவான நிலையில், அதை எதிர்த்து நீதிமன்றம் சென்ற Smith தற்போது பிரித்தானியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.
தற்போது அவரது புகைப்படமும், அவர் குறித்த சில புதிய தகவல்களும் வெளியாகியுள்ளன.
Smith ஸ்காட்லந்திலுள்ள Paisley என்ற நகரில் 1964 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆவார். அவர் Caledonian Airwaysஇல் பணி புரிந்துவந்துள்ளார்.
பின்னர் அவர் ஜேர்மனிக்கு குடிபெயர்ந்து, அங்கு Germany Guard Service என்னும் அமைப்பில் பணி புரிந்தபோது பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் அந்த அமைப்பை பணிக்காக ஒப்பந்தம் செய்துள்ளது.
அதித் தொடர்ந்து ஜேர்மனியிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் பாதுகாவலர் பணியில் சேர்ந்த Smith, அங்கு பணியாற்றும்போதுதான் முக்கிய தகவல்களை ரஷ்ய உளவாளிகளுக்குக் கொடுத்துள்ளார்.
இதற்கிடையில், ஜேர்மனியில் Smith கைது செய்யப்பட்டபோது, அவரை பிரித்தானியாவுக்கு நாடுகடத்த திட்டமிட்டதும், அவர் 16 ஆண்டுகளாக ஜேர்மனியில் வாழ்ந்துவருவதாகவும், ஜேர்மனியை தன் தாய் நாடாக கருதுவதாகவும் அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் வாதம் முன்வைத்ததும் அந்த வாதம் நிராகரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.