பணிந்தார் ரிஷி... பட்டதாரி விசா மீதான கட்டுப்பாடுகளை திரும்பப் பெற்றார்
பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒரு நடவடிக்கையாக, பட்டதாரி விசா திட்டத்தை மேலும் கட்டுப்படுத்தவும், கூடுமானால், அத்திட்டத்தையே முடிவுக்குக் கொண்டுவரவும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியிருந்தது.
உருவான எதிர்ப்பு
ஆனால், ரிஷியின் திட்டம், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிரித்தானியப் பொருளாதாரத்தின் மீது எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படுத்தக்கூடும் என்று கூறி, மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் உள்ளூர் மாணவர்களின் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
பின்வாங்கினார் ரிஷி
குறிப்பாக, பிரித்தானிய சேன்ஸலர் ஜெரமி ஹன்ட், வெளியுறவுச் செயலர் டேவிட் கேமரூன், உள்துறைச் செயலர் ஜேம்ஸ் கிளெவர்லி மற்றும் கல்விச் செயலர் Gillian Keegan ஆகியோர், ரிஷியின் கட்டுப்பாடுகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொருளாதாரத்தின்மீது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என வாதிட்டார்கள்.
அத்துடன், ரிஷியின் திட்டத்துக்கு, உள்ளூர் மாணவர்களின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். அதற்குக் காரணம் என்னவென்றால், உள்ளூர் மாணவர்களைவிட சர்வதேச மாணவர்கள் பல மடங்கு அதிக கல்விக் கட்டணம் செலுத்துகிறார்கள். ஆகவே, சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தால், உள்ளூர் மாணவர்களின் கல்விக்கட்டணம் அதிகரிக்கக்கூடும் என பிரித்தானிய மாணவர்களின் பெற்றோர் அஞ்சுகிறார்கள்.
இந்நிலையில், தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் (NISAU), பட்டதாரி விசா என்பது, பிரித்தானியாவை சர்வதேச மாணவர்கள் பெரிதும் விரும்பும் ஒரு நாடாக காட்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை வலியுறுத்தி கடிதம் ஒன்றை எழுதியிருந்தது.
ஆகவே, பட்டதாரி விசா மீது கடும் கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டிருந்த ரிஷி, தனது முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |