கோவாக்ஸின் தடுப்பூசியில் கன்றுக்குட்டியின் சீரம்? அதிர்ச்சியூட்டும் அறிக்கையை வெளியிட்ட சுகாதார அமைச்சகம்
கோவாக்சின் தடுப்பூசியில் புதிதாகப் பிறந்த கன்றுகுட்டியின் சீரம் கலக்கப்படுவதாக வெளியான அறிக்கைகள் குறித்து இந்திய சுகாதார அமைச்சகம் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.
பார்த்த பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பில் புதிதாக பிறந்த கன்றுக்குட்டியின் உடலில் இருந்து எடுக்கப்படும் திரவம் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அறிய, விகாஸ் பட்னி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்திருந்தார்.
அதற்கு "கோவாக்சின் மொத்த உற்பத்தியின் போது கொரோனா வைரஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் Vero செல்களின் புத்துயிர் செயல்பாட்டில் புதிதாகப் பிறந்த பசுங்கன்றின் சீரம் பயன்படுத்தப்படுகிறது" என பதிலளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கோவாக்சின் தடுப்பூசியில் கன்றுக்குட்டியின் சீரம் கலந்திருப்பதாகவும், தடுப்பூசியை தயாரிப்பதில் அது முக்கிய மூலப்பொருளாகவும் நாடு முழுவதும் தகவல் பரவியது.
இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசியில் புதிதாகப் பிறந்த கன்றின் சீரம் இருப்பதாகக் கூறப்படும் அறிக்கைகளை சுகாதார அமைச்சகம் இன்று மறுத்துள்ளது. மேலும் உண்மைகள் முறுக்கப்பட்டு தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளது.
சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் "இறுதி தடுப்பூசியில் (கோவாக்சின்) புதிதாகப் பிறந்த கன்று சீரம் இல்லை, அதேபோல் கன்றின் சீரம் இறுதி தடுப்பூசி உற்பத்தியின் ஒரு மூலப்பொருளும் அல்ல" என்று தெரிவித்துள்ளது.
"பல்வேறு வகையான மாடுகள் மற்றும் பிற விலங்குகளின் சீரம், வெரோ செல் வளர்ச்சிக்கு உலகளவில் பயன்படுத்தப்படும் ஒரு நிலையான செறிவூட்டல் மூலப்பொருளாகும். வெரோ செல்கள் தடுப்பூசிகளின் உற்பத்திக்கு உதவும். இந்த நுட்பம் பல தசாப்தங்களாக போலியோ, ரேபிஸில், இன்ஃப்ளூயன்ஸா போன்ற தடுப்பூசி உற்பத்திகளிலும் பயன்படுத்தப்படுகிறது" என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
"இந்த வெரோ செல்கள் வளர்ச்சியடைந்த பின், அதிலிருக்கும் புதிதாகப் பிறந்த கன்று சீரத்தை நீக்க, பலமுறை ததண்ணீர் மற்றும் ரசாயனங்களில் கழுவப்படுகின்றன" என்று மேலும் கூறப்பட்டுள்ளது..
பிறகு வைரஸ் வளர்ச்சிக்காக வெரோ செல்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட வைக்கின்றன. பிறகு "வைரஸ் வளர்ச்சியின் செயல்பாட்டில் வெரோ செல்கள் முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன. அதன் பிறகு இந்த வளர்ந்த வைரஸும் கொல்லப்பட்டு (செயலிழக்கச் செய்யப்பட்டு) சுத்திகரிக்கப்படுகிறது..
இந்த கொல்லப்பட்ட வைரஸ் பின்னர் இறுதி தடுப்பூசி தயாரிக்கப் பயன்படுகிறது. அதனால் இறுதி தடுப்பூசி உருவாக்கத்தில் கன்றின் சீரம் பயன்படுத்தப்படுவது இல்லை"என்று சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்திள்ளது.