ஐரோப்பாவை அடுத்து... அமெரிக்காவை வாட்டும் ஆபத்தான வெப்ப அலை
அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதி முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் ஆபத்தான வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதத்தை எதிர்கொண்டு வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் வெப்ப அலை
வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் (38 டிகிரி செல்சியஸ்) அளவை எட்டி, பல நாட்களுக்கு அதே நிலையில் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாஷிங்டன் டி.சி., பிலடெல்பியா மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில், ஜூலை 4-ஆம் திகதி வார இறுதியில் 'வெப்பக் குறியீடு' 115 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் என்று தேசிய வானிலை சேவை எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 250வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்துவதாலும், பல உலகக் கிண்ணப் போட்டிகள் திறந்தவெளியில் நடைபெறுவதாலும், அதிகரித்து வரும் வெப்பநிலை கவலைகளை எழுப்பியுள்ளது.
ஐரோப்பா முழுவதும் கோடைக்காலத்தின் தொடக்கத்திலேயே முன்னெப்போதும் இல்லாத அளவிலான வெப்பம் நிலவி, கண்டம் முழுவதும் வெப்பநிலைகள் சாதனை அளவை எட்டியதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் இந்த வெப்ப அலை ஏற்பட்டுள்ளது.
மத்திய மேற்குப் பகுதியைத் தாக்கி வரும் புழுக்கமான வெப்பம் தற்போது வடகிழக்கு மற்றும் மத்திய அட்லாண்டிக் மாகாணங்களுக்கும் பரவியுள்ளது.
வியாழக்கிழமையன்று மத்திய மேற்கு முதல் வடகிழக்கு வரை கடும் வெப்ப அலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இரவு நேரங்களில் வெப்பம் தணியாத அல்லது மிகக் குறைவாகவே தணியும் வகையிலான, அரிதான மற்றும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் இந்த வெப்ப நிலை, முறையான குளிர்விப்பு வசதி அல்லது போதுமான நீர்ச்சத்து இல்லாத எவரையும் பாதிக்கும் என்று தேசிய வானிலை சேவை எச்சரித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை காலை 9:00 மணி வாக்கில், வாஷிங்டன் மற்றும் நியூயார்க் நகரங்களில் வெப்பநிலை ஏற்கனவே 90 டிகிரி ஃபாரன்ஹீட்டை நெருங்கியிருந்தது. தேசிய வானிலை சேவையின் தகவலின் அடிப்படையில், நியூயார்க் சென்ட்ரல் பார்க்கில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டியதாகவும்; ஆனால் அது 106 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு உணரப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் அங்கு பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலை இதுவென்றே கூறப்படுகிறது. இதனிடையே, நியூயார்க் நகரவாசிகள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே தங்கி, குளிர்ச்சியாக இருக்குமாறு நான் பரிந்துரைக்கிறேன் என்று நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் எச்சரித்தார்.
கனடாவிலும் கடும் வெப்பம்
நியூயார்க் நகரம் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையைப் பதிவுசெய்யக்கூடும். இத்தகைய சூழல் இதற்கு முன்பு இருமுறை மட்டுமே நிகழ்ந்துள்ளது.
கடும் வெப்பநிலை நிலவும் என அறிவிக்கப்பட்ட போதிலும், சனிக்கிழமையன்று நடைபெறும் ஜூலை 4 கொண்டாட்டத்தில் ட்ரம்ப் திறந்தவெளியில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது; கொண்டாட்டத்திற்காக மக்கள் திறந்தவெளியில் கூட வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் ஜனாதிபதி வெளிப்படுத்தி வருகிறார்.

அமெரிக்காவின் வடக்கே அமைந்துள்ள அண்டை நாடான கனடாவிலும் இந்த வாரம் கடும் வெப்பம் நிலவுகிறது; ஒன்ராறியோ மாகாணத்தில் வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாண்ட்ரியல் மற்றும் கியூபெக் நகரம் உட்பட கியூபெக்கின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலை எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணமாக, வெப்ப அலைகள் அடிக்கடி ஏற்படுவதாகவும், தீவிரமடைவதாகவும், நீண்ட காலம் நீடிப்பதாகவும் மாறியுள்ளன.
தொழிற்புரட்சிக் காலம் தொடங்கியதிலிருந்து உலகம் ஏற்கனவே சுமார் 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பமடைந்துள்ளது; உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் உமிழ்வைக் கணிசமாகக் குறைக்காவிட்டால் வெப்பநிலை தொடர்ந்து உயரும் என்றே ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |