சீனாவில் உலகின் கவனம் ஈர்த்த யானைக்கூட்டத்தை நினைவிருக்கிறதா? அவை குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்
சீனாவில் 300 மைல் பயணம் செய்து உலகின் கவனம் ஈர்த்த யானைகள், மீண்டும் தாங்கள் புறப்பட்ட இடத்துக்கே திரும்பியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சென்ற ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி, 16 ஆசிய யானைகள் சீனாவின் Xishuangbanna என்ற இடத்திலுள்ள இயற்கை சரணாலயத்தை விட்டுவிட்டு, Pu’er என்ற நகரத்தை நோக்கி புறப்பட்டுள்ளன.
Yuxi என்ற நகரத்தை அடைந்த யானைகள் ஆறு மணி நேரம் ஊரையே துவம்சம் செய்திருக்கின்றன. இதனால் ஏற்பட்ட நஷ்டம் 760,000 பவுண்டுகள்.
யானைகளை கட்டுப்படுத்துவதற்காக 400 பொலிசார், அவசர சேவை அலுவலர்கள், 120 வாகனங்கள், ட்ரோன்களுடன் களமிறங்கியும் ஒன்றும் பலனில்லை.
ட்ரோன்கள் மூலம் யானைகள் கண்காணிக்கப்பட, அவை படம்பிடித்த அபூர்வ காட்சிகள் வைரலாக, உலகம் முழுவதும் இதே பேச்சுதான்.
பொதுவாக யானைகள் தங்கள் வாழிடத்தை விட்டு அதிக தூரம் பயணிக்காத நிலையில், இந்த யானைக்கூட்டம் ஏன் இப்படி 300 மைல் தூரம் பயணித்தது என்பதற்கான காரணம் யாருக்கும் புரியவில்லை.
இந்நிலையில், இப்போது அவை முன்பு தாங்கள் வாழ்ந்த இடத்திலிருந்து 125 மைல் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதாவது, மீண்டும் அந்த யானைக்கூட்டம் தாங்கள் புறப்பட்ட இடம் நோக்கி திரும்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Chen Mingyong என்னும் பேராசிரியர், கூட்டத்துக்கு புதிதாக ஒரு பெண் யானை தலைமையேற்றதால், அவளுக்கு போதுமான அனுபவம் இல்லாததால் தன் கூட்டத்தை தவறாக அவள் வழி நடத்தியிருக்கலாம் என்கிறார்.
லண்டன் உயிரியல் பூங்காவின் வனத்துறை நிபுணரான Becky Shu Chen என்பவர், 1980களிலிருந்து தொடங்கிய காடுகள் அழிப்பு காரணமாக யானைகள் மனிதர்கள் வாழும் இடம் நோக்கி நகரத் தொடங்கியதாக தெரிவிக்கிறார்.
வேறு சிலரோ, காடுகளில் வெறும் புல்லையும் இலைகளையும் மரப்பட்டைகளையும் தின்று சலித்துப்போன யானைகள், மனிதர்கள் விளைவிக்கும் சுவையான உணவுப்பயிர்களால் ஈர்க்கப்பட்டு காடுகளை விட்டு ஊருக்குள் வரத்தொடங்கியிருக்கலாம் என்கிறார்கள்.
என்றாலும், யாராலும் இந்த யானை பயணத்திற்கான சரியான காரணத்தைக் கூற முடியவில்லை. இருந்தாலும், அவை மீண்டும் தங்கள் வீட்டுக்கே திரும்புகின்றன என்ற செய்தி மட்டும் ஆறுதலை அளிப்பதாக அமைந்துள்ளது.