அச்சுறுத்தும் தகவல்... பிஞ்சு குழந்தைகளும் சிறார்களும் பலியாகும் கொடுமை: பரிதவிக்கும் நாடு
பிரேசிலில், ஆபத்தான வகையில் அதிக எண்ணிக்கையிலான பிஞ்சு குழந்தைகளும் சிறார்களும் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இறப்பதாக அச்சுறுத்தும் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவுக்கு மிக அரிதாகவே சிறார்கள் இறப்பார்கள் என நம்பப்பட்டு வந்த நிலையில், பிரேசில் நாட்டில் கொரோனா பரவல் தொடங்கிய நாள் முதல் இதுவரை 1,300 பிஞ்சு குழந்தைகள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலை நம்ப முடியாது எனவும், உண்மையான எண்ணிக்கை பல மடங்காக இருக்கலாம் எனவும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் பேசியுள்ள மருத்துவர் பாத்திமா மரின்ஹோ, பிரேசிலில் இதுவரை கொரோனாவுக்கு 1,302 பிஞ்சு குழந்தைகள் உட்பட, 9 வயதுக்கு உட்பட்ட சிரார்கள் மொத்தம் 2.060 பேர்கள் பலியானதாக தெரிவித்துள்ளார்.
பொதுவாக முதியவர்களை மட்டுமே கொரோனா தாக்கும் எனவும் சிறார்களுக்கு பாதிப்பு இல்லை எனவும் நம்பியிருந்த நிலையிலேயே பிரேசில் நாட்டில் இந்த மரண எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
மேலும், பிரேசிலிய சிறார்கள் இடையே, அரிதான பல்லுறுப்பு பாதிப்பு அறிகுறியும் தாம் கண்டறிந்ததாக கூறும் மருத்துவர் மரின்ஹோ, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஆறு வாரங்கள் வரை இது குழந்தைகளை பாதிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து 361,000 க்கும் அதிகமான கொரோனா இறப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ள நாடாக பிரேசில் மாறியுள்ளது, இது அமெரிக்காவிற்குப் பிறகு உலகிலேயே அதிக எண்ணிக்கையாகும்.
மட்டுமின்றி, கடந்த வாரம், உலகின் கொரோனா வைரஸ் இறப்புகளில் கால் பகுதிக்கும் அதிகமானவை பிரேசிலில் நிகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.