இலங்கையை போன்ற சீரழிவு தமிழகத்திற்கும் வரலாம்: இந்து தமிழர் கட்சித்தலைவர்
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினின் குடும்ப அரசியலால் இலங்கையை போன்ற சூழல் உருவாகலாம் என இந்து தமிழர் கட்சித்தலைவர் ராம.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தருமபுரம் ஆதீன பட்டின பிரவேசம் கோசாலைகள் அமைப்பு, ஆம்பூரில் பிரியாணி திருவிழா என சர்ச்சைகள் தொடர்ந்து வருவதால், முதல்வர் ஸ்டாலின் அரசுக்கு எதிராக இந்து அமைப்புகள் குரல் எழுப்பி வருகின்றன.
இந்த நிலையில், இந்து தமிழர் கட்சித்தலைவர் ராம.ரவிக்குமாரும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியை இலங்கையோடு ஒப்பிட்டு விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, 'சென்னை ஓமந்தூர் பல்நோக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும். ஓமந்தூரர் மாற்றி கருணாநிதியின் பெயரை சூட்டுவதற்கான முன் முயற்சியாக இது இருக்கலாம். இலங்கையில் குடும்ப ஆட்சியால் பொருளாதார சீரழிவு உருவாகியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் குடும்ப அரசியலால் சிக்கல் உருவாகலாம். இது திராவிட மொடல் அரசு அல்ல, ராஜபக்சே மொடல் அரசு' என தெரிவித்துள்ளார்.
முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இதே போன்று ஸ்டாலின் ஆட்சியை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.