பிள்ளையுடன் இனி நாடாளுமன்றத்தில் வரவேண்டாம்... தடை விதிப்புக்கு பதிலடி தந்த பிரித்தானிய பெண் எம்.பி
பிள்ளைகளுடன் வருவோரை இனி நாடாளுமன்ற அவையில் அனுமதிக்க முடியாது என விதிக்கப்பட்ட தடைக்கு தொழிலாளர் கட்சி உறுப்பினர் ஸ்டெல்லா க்ரீஸி பதிலடி கொடுத்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்ற அவை நிர்வாகிகள் தமக்கு அனுப்பிய மின் அஞ்சல் நகலை தமது டுவிட்டர் பக்கத்தில் இணைத்து பதிவிட்ட எம்.பி. ஸ்டெல்லா க்ரீஸி, கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
நாடாளுமன்ற கீழவையில் எனது மூன்று மாத மகனுடன் செல்ல முடியாதாம், சட்டத்தை சுட்டிக்காட்டுகிறார்கள், ஆனால் அவர்களால் இதுவரை மாஸ்க் அணிவது தொடர்பில் ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை என சாடியுள்ளார் ஸ்டெல்லா க்ரீஸி.
நேற்றைய தினம் Walthamstow நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா க்ரீஸி தமது மூன்று மாத குழந்தையுடன் நாடாளுமன்ற அவைக்கு சென்றுள்ளார். இந்த நிலையிலேயே நாடாளுமன்ற விதிகளை சுட்டிக்காட்டி உறுப்பினர் ஸ்டெல்லா க்ரீஸிக்கு மின் அஞ்சல் அனுப்பியுள்ளனர்.
கடந்த செப்டம்பர் தொடக்கத்தில் திருத்தப்பட்ட விதிகளை நாடாளுமன்ற அவை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், அதிக எண்ணிக்கையிலான பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையை ஸ்டெல்லா க்ரீஸி முன்வைத்துள்ளார்.
சமூகத்தில் மாறுதல் ஏற்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால் அரசியலும் குழந்தை வளர்ப்பும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா க்ரீஸி தெரிவித்துள்ளார்.