இளவரசி டயானாவின் மரணத்தின்போது சம்பவ இடத்திலிருந்த மற்றொரு கார்... காரை செலுத்திய நபர் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்
இளவரசி டயானாவின் கார் பாரீஸில் விபத்துக்குள்ளானபோது சம்பவ இடத்தில் மற்றொரு காரும் இருந்ததாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இளவரசி டயானா, தனது புதிய காதலரான டோடி ஃபயத்துடன் பாரீஸில் ஒரு சுரங்கப்பாதையில் பயணித்துக்கொண்டிருந்தபோது நடந்த ஒரு விபத்தில் கொல்லப்பட்டார். அது விபத்தல்ல, திட்டமிட்ட சதி என இன்னமும் பலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அந்த கூற்றை நிரூபிக்க வலுவான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. விபத்தில் டயானாவுடன் அவரது காதலர் டோடியும், சாரதியும் உயிரிழக்க, டோடியின் பாதுகாவலர் ஒருவர் மட்டும் உயிர் தப்பினார். ஆனால், விபத்தில் படுகாயமடைந்த அவர் தனது நினைவை இழந்துவிட்டதால், அவரால் என்ன நடந்தது என்று தெளிவாக கூற இயலவில்லை.
இதற்கிடையில், விபத்து நடந்தபோது, அதே சுரங்கப்பாதையில் மற்றொரு வெள்ளை நிற பியட் கார் பயணித்துள்ளது. அது டயானாவின் காருடன் லேசாக மோதிவிட்டு அங்கிருந்து விரைந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அந்த காரை ஓட்டியவர், வியட்நாமிலிருந்து புலம்பெயர்ந்தவரான Le Van Thanh (22) என்னும் பாரீஸில் வேலை செய்த பாதுகாவலர் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆனால், Thanhஐ விசாரித்தபோது தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார். விபத்து நடந்த அதே பாதையில் பயணித்த Georges மற்றும் Sabine Dauzonne என்னும் தம்பதி, தாங்களும் அந்த வெள்ளை நிற பியட் காரை பார்த்ததாகவும், அந்த காரில் ஒரு நாய் இருந்ததாகவும் கூறினார்கள்.
அவர்கள் தாங்கள் பார்த்த நபரின் உருவத்தையும் விவரித்திருந்தார்கள். டயானாவின் காரை தடயவியல் நிபுணர்கள் சோதனைக்குட்படுத்தியபோது, அதில் ஒரு வெள்ளை நிற கார் மோதியிருந்தது உறுதி செய்யப்பட்டது.
ஆனால், பொலிசார் Thanhஐ தேடிச் செல்லும்போது அவரது கார் சிவப்பு நிறத்திலிருந்தது. விசாரித்ததில், தான் முன்பே தனது வெள்ளை நிற காரை சிவப்பாக மாற்றிவிட்டதாக கூறினார் அவர். ஆனால், Georges மற்றும் Sabine Dauzonne தம்பதி, விவரித்த அடையாளம் Thanhக்கு சரியாக பொருந்தியது.
அவர்கள் கூறிய காரின் எண்கள் சிலவும் பொருந்தின. அத்துடன் Thanhஇடம் ஒரு பெரிய நாயும் இருந்தது. ஆனால், மீண்டும் மீண்டும் தனக்கு எதுவும் தெரியாது என்றே கூறிவிட்டார் Thanh. பின்னர், இன்னொரு திருப்பம் நிகழ்ந்தது. Thanhஇன் தந்தை, டயானாவின் விபத்துக்குப் பிறகுதான் தன் மகன் தனது காரை சிவப்பு பெயிண்ட் அடித்து மாற்றிவிட்டதாக தெரிவித்தார்.
ஆனால், அதற்கு மேல் Thanhஐ விசாரிக்க பிரான்ஸ் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. உண்மையில் நடந்தது என்ன, Thanh ஏன் உண்மையை மறைக்கிறார், அவருக்கும் டயானா மரணத்துக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என ஏராளம் கேள்விகள்.
பத்திரிகையாளர்கள் அவரைத் தேடிக்கண்டுபிடித்து டயானா மரணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஆனால், Thanh எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை. அவர் வாய் திறந்தால், பல உண்மைகள் வெளியாகலாம்.