பிரான்சுக்கு ஆவலுடன் சுற்றுலா புறப்பட்ட பிரித்தானியர்கள்... புதிய விதிகளால் ஏற்பட்டுள்ள பெரும்குழப்பம்
பிரான்ஸ் பிரித்தானியாவின் ஆம்பர் பிளஸ் பட்டியலிலிருந்து நேற்று முன்தினம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரான்சுக்கு செல்லும் ஆசையிலிருந்த பிரித்தானியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால், பிரான்ஸ் ஜனாதிபதி நேற்று கொண்டு வந்த ஒரு புதிய விதி, ஏற்கனவே பிரான்சுக்கு சுற்றுலா சென்றுள்ளவர்களுக்கும், இனி பிரான்சுக்கு செல்ல திட்டமிட்டிருந்தவர்களுக்கும் பெரும்குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (8.8.2021) முதல், பிரான்சில் கொரோனா பாஸ்போர்ட் விதிகள் அமுலுக்கு வந்துள்ளன. அதன்படி, பிரான்சுக்கு சுற்றுலா செல்வோர், பிரான்சில் சுற்றுலாத்தலங்களை சுற்றிப்பார்க்கச் சென்றாலும் சரி, உணவருந்தச் சென்றாலும் சரி, எங்கு சென்றாலும் தாங்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டதற்கு ஆதாரமாக, பிரித்தானிய சுகாதாரத்துறை அளித்துள்ள டிஜிட்டல் QR குறியீட்டை பிரித்தானியர்கள் தங்கள் ஸ்மார்ட்போனிலுள்ள பிரெஞ்சு கொரோனா வைரஸ் ஆப்பில் பதிவேற்றம் செய்துகொள்ளவேண்டும்.
ஆனால், பிரச்சினை என்னவென்றால், 20 சதவிகிதம் பிரித்தானியர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லையாம். ஆக, அவர்களால் டிஜிட்டல் QR குறியீட்டை தடுப்பூசி பெற்றுக்கொண்டதற்கு ஆதாரமாக காட்டமுடியாது. எல்லையில் வேண்டுமானால் பிரித்தானிய சுகாதாரத்துறை அளித்த கடிதத்தை தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரமாக காட்டலாம். ஆனால், அவற்றை சுற்றுலாத்தலங்களிலும் உணவகங்களிலும் காட்டமுடியாது.
ஒருபக்கம் இந்த பிரச்சினையால் பிரித்தானியர்களுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், மறுபக்கம், ஆயிரக்கணக்கான பிரெஞ்சு உணவக உரிமையாளர்கள் தாங்கள் இந்த விதிகளை மீறப்போவதாக தெரிவித்துள்ளார்கள்.
நீண்ட பொதுமுடக்கத்தால் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போதுதான் மீண்டும் வருவாய்க்கான ஒரு வழி திறந்துள்ளது. இப்போது போய் உணவருந்த வரும் சுற்றுலாப்பயணிகளிடம் கொரோனா பாஸ்போர்ட் இருக்கிறதா என்று கேட்டு, அவர்களை திரும்ப அனுப்பப்போவதில்லை என்கிறார்கள் உணவக ஊழியர்கள்.
நான் பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளிடம் கொரோனா பாஸ்போர்ட் இருக்கிறதா என்று கேட்கப்போவதில்லை என்று கூறும் பிரெஞ்சு உணவகம் ஒன்றின் உரிமையாளரான Jean-Jacques Samoy (60) என்பவர், அதற்காக அதிகாரிகள் எனக்கு அபராதம் விதிப்பார்கள் என்றால், அதை செலுத்தவும் நான் தயார். அபராதம் செலுத்துவதற்காக என்றே நான் 45,000 யூரோக்களை தனியாக எடுத்து வைத்திருக்கிறேன்.
அப்படியே விதிகளை மீறியதற்காக என்னை சிறைக்கு அனுப்புவார்கள் என்றால், அதற்கும் தயாராக பெட்டி படுக்கைகளை எடுத்து வைத்திருக்கிறேன் என்கிறார்.