பிரித்தானியாவில் அகதி நிலை வழங்க வெளிநாட்டவரிடம் லஞ்சம் கேட்ட உள்துறை அலுவலர் கைது
பிரித்தானியாவில் அகதி நிலை வழங்க, வெளிநாட்டவர் ஒருவரிடம் லஞ்சம் கேட்ட உள்துறை அலுவலக அலுவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள விடயம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
அகதி நிலை வழங்க லஞ்சம் கேட்ட உள்துறை அலுவலர்
ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி, வரும் தேர்தலில் வெற்றி பெறுமா இல்லையா என்பதை முடிவு செய்யும் பெரிய பிரச்சினையாக பிரித்தானியாவில் புலம்பெயர்தல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், வெளிநாட்டவர் ஒருவருக்கு அகதி நிலை வழங்க அவரிடம் 2,000 பவுண்டுகள் லஞ்சம் கேட்டுள்ளார், Home Office case worker என்னும் பொறுப்பிலிருக்கும் உள்துறை அலுவலர் ஒருவர்.
EPA-EFE
நடந்தது என்ன?
வட அயர்லாந்தில் வசித்துவரும் Renas என்று அழைக்கப்படும் அந்த வெளிநாட்டவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அழைத்தவர், தான் உள்துறை அலுவலகத்தில் பணி செய்வதாகவும், Renasஉடைய விண்ணப்பத்தைப் பார்த்ததாகவும் விவரமாகக் கூறி, ’உன்னைப்போன்றவர்களில் 95 சதவிகிதம் பேருக்கு அகதி நிலை கிடைக்காது.
ஆனால், உனக்கு என்னால் உதவி செய்யமுடியும். நீ எனக்கு 2,000 பவுண்டுகள் கொடுத்தால், உனக்கு அகதி நிலை கிடைக்க உதவி செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
Renas, முன்னர் ஊடகத்துறையில் பணியாற்றியவர். ஆகவே, இது ஏதேனும் மோசடியாக இருக்குமோ என அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் தனது சட்டத்தரணியை அழைத்து விடயத்தைக் கூற, அடுத்த முறை அந்த உள்துறை அலுவலக அலுவலர் வீடியோ காலில் அழைக்கும்போது, அவரது அழைப்பை பதிவுசெய்துள்ளார்கள்.
அந்த ஆதாரத்துடன், அவரது சட்டத்தரணி பொலிசாருக்கு தகவலளிக்க, அந்த உள்துறை அலுவலக அலுவலர் கைது செய்யப்பட்டதுடன், பணியிடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.
இந்த விடயம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், பொலிசார் அந்த உள்துறை அலுவலக அலுவலரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |