ஹார்முஸில் சீரடையும் போக்குவரத்து... கச்சா எண்ணெய் விலை 50 டொலருக்கு கீழ் சரியுமா?
ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்து சீரடைந்து வருவதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலைகள் புதன்கிழமையன்றும் சரிவைத் தொடர்ந்தன; கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்த விலைக்கு அருகில் நீடிக்கின்றன.
சுமார் 1 சதவீத சரிவுடன்
அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் மத்தியில், சிக்கித் தவித்த மேலும் பல எண்ணெய்க் கப்பல்கள் மீண்டும் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்கும் என்பதற்கான அறிகுறிகளும் தென்பட்டுள்ளன.

பிரெண்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்களின் விலை 1.18 சதவீதம் சரிந்து ஒரு பீப்பாய்க்கு 76.17 டொலராகவும், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் விலை 1.16 சரிந்து சரிந்து 72.36 டொலராகவும் குறைந்தது.
இந்த இரு கச்சா எண்ணெய் விலைகளும் செவ்வாய்க்கிழமையன்று சுமார் 1 சதவீதம் சரிவுடன் நிலைபெற்றன; இது மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்தான அவற்றின் மிகக் குறைந்த விலையாகும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் இடையே போர் உச்சத்தில் இருந்தபோது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை கிட்டத்தட்ட 120 டொலர் என்ற உச்சத்தை எட்டியிருந்தது; அதிலிருந்து தற்போது அதன் விலை 36 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.
இந்த நிலையில், ஆரம்பக்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஈரான் தனது எண்ணெய் ஏற்றுமதியை மீண்டும் தொடங்க அனுமதிக்கும் வகையில் ட்ரம்ப் நிர்வாகம் அந்த நாட்டிற்கு 60 நாள் தடையில்லா விலக்கு அளித்ததைத் தொடர்ந்து, சந்தை அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.
மேலும், லெபனானில் பதற்றம் தணிந்திருப்பது, விநியோகத் தடைகள் குறித்த கவலைகளை மேலும் குறைத்துள்ளது. மூத்த ஆராய்ச்சி ஆய்வாளர் ஒருவர் தெரிவிக்கையில்,
அமெரிக்க-ஈரான் இடைக்கால அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் விநியோகத் தடைகள் குறித்த கவலைகள் தணிந்ததாலும், ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய்க் கப்பல்களின் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியதாலும் கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாகச் சரிந்துள்ளன.

வர்த்தகப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியிருப்பது, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தியிருந்த புவிசார் அரசியல் இடரை கணிசமாகக் குறைத்துள்ளது.
கூடுதல் ஈரானிய கச்சா எண்ணெய் உலக சந்தைகளுக்குத் திரும்புவது மற்றும் OPEC+ உற்பத்தியாளர்களின் உற்பத்தி அதிகரிப்பு ஆகியவற்றுடன் இணைந்து, வரும் மாதங்களில் விநியோக இருப்பு நிலை மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
அபாயங்களைக் கட்டுப்படுத்தும்
விநியோகம் தொடர்பான கவலைகள் தணிவது கச்சா எண்ணெய் விலையின் மீது தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், பீப்பாய் ஒன்றுக்கு 50 டொலருக்கும் குறைவாக விலை குறைய வாய்ப்பில்லை என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அண்மைக்காலத்தில் ஒரு பீப்பாயின் விலை 50 டொலருக்கும் கீழே சரியும் வாய்ப்பு குறைவு. பதற்றங்கள் தணிந்திருப்பது விலை உயர்வுக்கு வித்திட்ட ஒரு முக்கிய காரணியை நீக்கியிருந்தாலும், உலகளாவிய எண்ணெய் தேவை - குறிப்பாக வளர்ந்து வரும் ஆசியப் பொருளாதாரங்களில் - தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேலும், விலைகள் பெருமளவு சரிந்தால், முக்கிய உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் தலையிடக்கூடும்; இது விலை சரிவினால் ஏற்படும் அபாயங்களைக் கட்டுப்படுத்தும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கச்சா எண்ணெய் விலை 50 டொலருக்கும் கீழே குறைய வேண்டுமானால், ஈரானின் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்தல், முக்கிய உற்பத்தியாளர்களிடமிருந்து தொடர்ந்து உற்பத்தி அதிகரிப்பு, சீனா மற்றும் பிற முக்கிய நாடுகளின் தேவை குறைதல் மற்றும் உலகளாவிய கையிருப்புகள் பெருமளவில் அதிகரித்தல் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து நிகழ வேண்டியிருக்கும் என்றே குறிப்பிடுகின்றனர்.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கச்சா எண்ணெய் விலைகள் பீப்பாய் ஒன்றுக்கு 70 முதல் 85 டாலர் என்ற வரம்பிலேயே நீடிக்கக்கூடும். இருப்பினும், 60 டொலருக்கு கீழ் குறையும் வாய்ப்புகள் தற்போது இல்லை என்றே ஆய்வாளர்களின் கணிப்பாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |