துப்பாக்கியுடன் யூத கோவிலுக்குள் புகுந்து பிணைக்கைதியாக்கிய நபர்: அவர் விடுத்த கோரிக்கை
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் யூத கோவிலுக்குள் புகுந்து பக்தர்களை பிணைக்கைதியாக்கிய நபர், தமது சகோதரியை விடுவிக்க கோரிக்கை வைத்துள்ளார்.
டெக்சாஸ் மாகாணத்தில் Colleyville பகுதியில் அமைந்துள்ள பெத் இஸ்ரேல் என்ற யூத கோவிலுக்குள் புகுந்தே அந்த நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
குறித்த சம்பவம் அந்த யூத கோவிலின் பேஸ்புக் பக்கத்தில் நேரலை செய்யப்பட, SWAT அதிகாரிகள் அந்த யூத கோவிலை சுற்றி வளைத்தனர். பின்னர் அந்த துப்பாக்கிதாரியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள், மத போதகர் மற்றும் எஞ்சிய நால்வரையும் விடுவிக்க கோரியுள்ளனர்.
ஆனால் அந்த நபர், இஸ்லாம் மற்றும் தமது சகோதரி தொடர்பிலேயே அதிகாரிகளிடம் பேச முயன்று வந்துள்ளார். மேலும், குறித்த கோவிலுக்குள் அதிகாரிகள் அத்துமீறி நுழைந்தால் பிணைக்கைதிகள் அனைவரையும் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனிடையே, நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், மர்ம நபருடன் பேச்சுவார்த்தை சுமூகமாக முன்னேறுவதாகவும் Colleyville பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட தகவலில், குறித்த நபர் பாகிஸ்தானின் பிரபல நரம்பியல் விஞ்ஞானி Aafia Siddiqui என்பவரின் சகோதரர் எனவும்,
2010ல் ஆப்கானிஸ்தானில் வைத்து அமெரிக்க அதிகாரிகள் மற்றும் அமெரிக்க குடிமக்கள் சிலரை கொல்ல முயன்ற காரணத்திற்காக கைது செய்யப்பட்டு தற்போது அவர் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நரம்பியல் விஞ்ஞானி Aafia Siddiqui விடுதலைக்காக பாகிஸ்தானிலும் பொதுமக்களிடையே பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மட்டுமின்றி, 2018 தேர்தல் அறிக்கையிலும் விஞ்ஞானி Aafia Siddiqui ஐ பாகிஸ்தானுக்கு மீட்டுவர ஆவன செய்யப்படும் என பிரதமர் இம்ரான் கான் உறுதி அளித்திருந்தார்.