புத்தாண்டு பிறந்தபின் ஜேர்மனியில் கொரோனா நிலவரம் எப்படி உள்ளது?
புத்தாண்டு பிறந்தபின் ஜேர்மனியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
ஜேர்மனியில், புது வருடப் பண்டிகையைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக கொரோனா தொற்று அதிகரித்தவண்ணம் உள்ளது.
திங்கட்கிழமை நிலவரப்படி, ஏழு நாட்களில் 100,000 பேரில் எத்தனை பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உருவாகியுள்ளது என்ற எண்ணிக்கை 232ஆக உயர்ந்துள்ளது. முந்தைய தினம் அது 222.7ஆக இருந்தது.முந்தைய வாரமும் அது 222.7ஆகத்தான் இருந்தது.
நாளொன்றிற்கு எத்தனை பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகிறார்கள் என்ற எண்ணிக்கை, டிசம்பர் 27 அன்று 13,908 ஆக இருந்தது. அது, திங்கட்கிழமை, 3.1.2022 அன்று, 18,518 ஆக உயர்ந்துள்ளது.
ஆனால், கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை, முந்தைய வாரம் 68 ஆக இருந்தது. திங்களன்று 69ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், புத்தாண்டு விடுமுறையில் அதிகம் பேர் கொரோனா பரிசோதனை செய்திருக்கமாட்டார்கள் என்பதாலும், பரிசோதனை முடிவுகள் முழுமையாக வெளியாகியிருக்காது என்பதாலும், கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என்று Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல், சுகாதாரத்துறை அமைச்சரான Karl Lauterbachம், கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் உண்மையான எண்ணிக்கை, Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ள எண்ணிக்கையைக் காட்டிலும் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகம் இருக்கலாம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.