நீங்கள் கழிவறையில் அதிக நேரம் செலவு செய்பவரா?இந்த பதிவு உங்களுக்கு தான்
நம்மில் பலரும் கழிவறையை நம்முடைய ஓய்வறையை போல் பயன்படுத்தி வருகின்றோம். அதாவது ஒரு சிலர் கழிவறைக்கு சென்றால் நீண்ட நேரம் கழித்து அவர்கள் வெளியே வருகிறார்கள். அப்படியாக, கழிவறையில் எவ்வளவு நேரத்திற்கு மேல் அமர்ந்தால் நமக்கு பாதிப்பு என்று பார்ப்போம்.
பொதுவாகவே, இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கழிவறைக்கு சென்று மொபைல் போன் அதிக நேரம் பயன்படுத்துவதை நாம் பார்க்க முடிகிறது. இது ஆரம்ப காலகட்டத்தில் பெரிய பிரச்சனை கொடுக்காவிட்டாலும் காலப்போக்கில் இது நமக்கு மிகப்பெரிய அளவில் ஒரு பிரச்சனையை உருவாக்குகிறது.

மூலநோய் ஆபத்து
கழிவறையில் நீண்ட நேரம் ஒருவர் அமர்ந்து இருக்கின்ற பொழுது அவர்களுக்கு மலக்குடல் மற்றும் ஆசனவாய் பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களில் அதிகம் அழுத்தம் ஏற்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து ஏற்படுகின்ற பொழுது அந்த அழுத்தத்தால் ஆசனவாயில் வீக்கம் ஏற்பட்டு மூல நோய் உருவாகிறது.
இதை தான் நாம் பைல்ஸ் என்று சொல்கின்றோம். இதனால் மலம் கழிக்கும் போது கடுமையான வீக்கம் அரிப்பு மற்றும் ரத்தப்போக்கு பிரச்சனைகள் வருகிறது. அதோடு குடலை தாங்குவதிலும் சிறுநீர்ப்பையை தாங்குவதிலும் பெல்விக் தசைகள்தான் முக்கிய பங்கு பெறுகிறது.
தசைகள் பலவீனம்
நீண்ட நேரம் அமர்ந்து இருக்கின்ற பொழுது இந்த தசைகள் பலவீனம் ஆகக்கூடும். அதனால் மலம் கழிப்பதில் சிக்கலை ஏற்படுத்துவதோடு இடுப்பு பகுதியில் பலவீனத்தை உண்டாக்குகிறது. மேலும், கழிவறையில் ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கின்ற பொழுது உடலுக்குக் சீரான ரத்த ஓட்டம் என்பது முற்றிலும் குறைந்து விடுகிறது.

இதனால் தான் இடுப்பு மற்றும் தொடை பகுதிகளுக்கு தேவையற்ற அழுத்தம் ஏற்பட்டு கால்கள் மரத்துப் போகும். ஆதலால், ஒருவர் கழிவறையில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் மட்டுமே செலவிட வேண்டும் என்று மருத்துவர் சொல்கிறார்கள்.
மொபைல்போனை தவிர்க்கவும்
ஒருவருக்கு இயல்பாக மலம் கழிக்க வரவில்லை என்றால் தொடர்ந்து கழிவறையில் அமர்ந்திருக்கக் கூடாது. நாம் அதனை கட்டாயப்படுத்தியும் செயல்படுத்தக் கூடாது. அவ்வாறு நாம் கட்டாயப்படுத்தி மலம் கழிக்கின்ற வேலையில் தான் நிறைய பிரச்சனைகளை சந்திக்கின்றோம். அதைவிட குறிப்பாக கழிவறை செல்லும் பொழுது மொபைல் போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சனைகளை குறைக்கலாம்.