ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு கொரோனா எப்படி பரவியது தெரியுமா? வெளியான முக்கிய தகவல்
ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு கொரோனா எப்படி பரவியது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர், இந்தாண்டும் கொரோனா பரவலுக்கு மத்தியில், பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டு வந்தது.
இருப்பினும், வீரர்கள் மற்றும் ஐபிஎல் அணி நிர்வாகத்தில் இருக்கும் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், சக வீரர்களின் பாதிப்பை கருத்தில் கொண்டு, இந்த தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வீரர்களுக்கு எப்படி கொரோனா பரவியது என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், கடந்த மே மாதம் 3-ஆம் திகதி கொல்கத்தா அணி வீரரும், தமிழக வீரருமான வருண் சக்கரவர்த்திக்கு முதன் முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்தே ஒவ்வொரு வீரர்களுக்கு பரவியுள்ளது. ஏனெனில், வருண் சக்கரவர்த்தி தனது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக பயோ பபுளை விட்டு வெளியேறி மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்துள்ளார்.
அதன் பின் அவர் எந்தவித குவாரண்டைனிலும் இல்லாமல் அணியின் பபுளுக்குள் நுழைந்துள்ளார். இங்கு தான் பிரச்னையே ஆரம்பித்துள்ளது.
மருத்துவமனையில் இருந்து திரும்பிய வருண் சக்கரவர்த்தி, தனது சக வீரர் சந்தீப் வாரியருடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அவர்கள் மிக அருகில் அமர்ந்துக்கொண்டு நீண்ட நேரம் பேசிக்கொண்டு உணவருந்தியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து ஒன்றாக பயிற்சி ஆட்டத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் வருண் அப்போது உடல்நிலை சரியில்லை எனக்கூறிவிட்டு அறைக்கு சென்றுவிட்டார்.
பின்னர் சந்தீப் மட்டும் கொல்கத்தா அணியுடன் பயிற்சிக்கு சென்றுள்ளார். அதே தினம் கொல்கத்தா மற்றும் டெல்லி என இரு அணிகளுக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன.
வருணுடன் தொடர்பில் இருந்திருந்த சந்தீப் வாரியர் நேராக டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அமித் மிஸ்ராவிடம் சென்று நீண்ட நேரம் பேசி சிரித்துள்ளார்.
பின்னர் இருவரும் அவர் அவர் அணிகளுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பயிற்சிக்கு பின்னர் ஹோட்டல் அறைக்கு சென்ற அமித் மிஸ்ரா தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறியுள்ளார்.
இதனையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். மற்ற வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். அதே போல கொல்கத்தா அணியில் சந்தீப் வாரியரும் தனிமைப்படுத்தப்பட்டார்.
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சென்னை அணியின் உரிமையாளர் காசி விஸ்வநாதன், பவுலிங் பயிற்சியாளர் எல் பாலாஜி மற்றும் பஸ் கிளீனர் ஒருவர் ஆகிய மூன்று பேருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதால், இது இன்னும் எத்தனை பாதிக்க உள்ளது என்ற பீதியும் வீரர்களிடையே உள்ளது.