டிராவிட்டை இந்தியாவின் பயிற்சியாளர் ஆக்க நான் பட்ட கஷ்டம்! முதன் முறையாக சொன்ன கங்குலி
பிசிசிஐ தலைவர் கங்குலி, டிராவிட்டை எப்படி இந்தியாவின் பயிற்சியாளராக ஆக்கினோம் என்பது குறித்து முதன் முறையாக பேசியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த டி20 உலகக்கோப்பை தொடரோடு, ரவிசாஸ்திரியின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததால், டிராவிட் நியமிக்கப்பட்டார்.
ஆனால், இது ஒன்றும் அவ்வளவு எளிதாக நடந்துவிடல்லை என்று பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான கங்குலி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளராக யாரை நியமிப்பது என்பது குறித்த விவதாம் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. நானும் பலமுறை டிராவிட்டை பயிற்சியாளராக வரும்படி அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தேன்.
ஆனால் அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார். அதன் பின், நாங்கள் டிராவிட்டை வற்புறுத்துவதை நிறுத்தி விட்டோம். பிறகு மீண்டும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக அவர் நியமிக்கப்பட்ட பிறகு நாங்கள் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்குமாறு கூறினோம்.
அப்போது கூட அவர் ஏற்கவில்லை. அதன்பிறகு தனிப்பட்ட முறையில் நான் அவரிடம் இந்த பதவியின் போது உங்களுக்கு இருக்கும் கஷ்டம் எனக்கு தெரியும்.
இருப்பினும், இரண்டு ஆண்டுகள் மட்டும் பயிற்சியாளராக இருங்கள் என்று கூறி ஒரு வழியாக சமாதானப்படுத்தினேன். அதன் பிறகே டிராவிட் பயிற்சியாளராக ஒப்புக் கொண்டார்.
அவர் மனம் எப்போது மாறியது என்பது எனக்கு தெரியவில்லை என்று கங்குலி கூறினார்.