பிளே ஆப் சுற்றுக்கு மும்பையால் தகுதி பெற முடியுமா? இனி என்ன நடக்க வேண்டும்? வெளியான முழு விபரம்
ஐபிஎல் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு மும்பை அணி தகுதி பெறுமா என்பதை என்று பார்ப்போம்.
இந்தியாவில் இந்த ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடர், கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தற்போது இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
தற்போது கிட்டத்தட்ட பெரும்பாலான அணிகள் 9 போட்டிகளும், டெல்லி மற்றும் பஞ்சாப் அணி 10 போட்டிகளும் விளையாடி முடித்துள்ளது.
இதில் டெல்லி அணி 10-ல் 8 வெற்றியுடன் முதல் இடத்திலும், அடுத்த படியாக சென்னை அணி 9-ல் 7 வெற்றியுடன் இரண்டாம் இடத்திலும், பெங்களூரு அணி 9-ல் 5 வெற்றியுடன் மூன்றாம் இடத்திலும், கொல்கத்தா 9-ல் 4 வெற்றியுடன் நான்காம் இடத்திலும் உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக பஞ்சாப், 5-வது இடத்திலும் மும்பை 6-வது இடத்திலும், ராஜஸ்தான் 7-வது இடத்திலும், ஹைதராபாத் அணி கடைசி இடத்திலும் உள்ளது. இதில் டெல்லி அணி தன்னுடைய பிளே ஆப் சுற்றை கிட்டத்தட்ட உறுதிபடுத்திவிட்டது.
இன்னும் மீதமுள்ள 4 போட்டிகளில் ஒரு வெற்றியை பெற்றாலே போதும், அதே போன்று சென்னை அணியும் 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றாலே போதும். குறிப்பாக மூன்றாம் மற்றும் நான்காம் இடத்திற்கு பெங்களூரு, கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை அணிகளுடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதில் மும்பை அணி இன்றைய பெங்களூரு அணியுடனான போட்டியில் தோல்வியடைந்துள்ளதால் 10-க்கு 4 வெற்றி என புள்ளிப் பட்டியலில் 7-வது இடத்திற்கு சென்றது. அதுவே பெங்களூரு 10-க்கு 6 வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்திலே தொடர்ந்து நீடிக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.
அதே சமயம் இந்த தோல்வியின் மூலம் மும்பை அணி மீதமிருக்கும் 4 போட்டிகளிலும் தொடர்ந்து ஜெயிக்க வேண்டும், அதில் ஒரு போட்டியில் கூட தோல்வியடைந்தால் மும்பை அணியின் பிளே ஆப் கனவு அவ்வளவு தான்.
ஏனெனில் மும்பை அணிக்கு அடுத்து பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுடன் போட்டி உள்ளது. இதில் பஞ்சாப், ராஜஸ்தானும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற போட்டியை விட்டுக் கொடுக்காது.
பஞ்சாப் அணியும் 10 போட்டிகளில் 4 வெற்றி 6 தோல்வி என புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் ரன் ரேட் விகிதத்தில் முன்னிலையில் உள்ளது. அதுவே ராஜஸ்தான் அணி 9 போட்டிகள் விளையாடி 4 வெற்றியுடன் 6-வது இடத்தில் உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக தான் மும்பை அணி உள்ளது.
இதில் பஞ்சாப் அணியுடன் முதல் பாதியில் மும்பை அணி தோல்வியை சந்தித்துள்ளது. அதே போன்று டெல்லி அணியும் இந்த முறை பயங்கர பார்மில் உள்ளதால், இனி வரும் ஒவ்வொரு போட்டியும் மும்பை அணிக்கு வாழ்வா? சாவா என்ற நிலை தான் என்பது குறிப்பிடத்தக்கது.