ஜேர்மன் தலைநகரில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் தடையை மீறி பேரணி: பொலிசாருடன் மோதல்
ஜேர்மனியில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. நீதிமன்றம் பேரணிகள் நடத்தக்கூடாது என உத்தரவிட்ட நிலையிலும், தடையை மீறி ஏராளமானோர் நாடெங்கிலும் பேரணிகளில் பங்கேற்றார்கள்.
நேற்று பெர்லினில் பேரணி ஒன்றில் பங்கேற்பதற்காக நூற்றுக்கணக்கானோர் கூடிய நிலையில், பொலிசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பெர்லினில் சுமார் 2,000 பொலிசார் குவிக்கப்பட்ட நிலையில், தங்கள் சகாக்களை பேரணியில் ஈடுபட்டோர் தாக்கியதாக பொலிசார் குற்றம் சாட்டியுள்ளார்கள். அதனால், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைக்க முயன்றதாக பொலிசார் தெரிவித்தார்கள்.
போராட்டங்களில் பங்கேற்ற பலர் மாஸ்க் அணியாத நிலையில், விடுதலை வேண்டும், கொரோனா சர்வாதிகாரம் ஒழிக, என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சிலர் ஏந்தியிருந்தார்கள்.
வார இறுதியில் மக்கள் பேரணிகளுக்கு திட்டமிட்டிருந்த நிலையில், ஏற்கனவே ஜேர்மனியில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், பேரணியில் பங்கேற்போர் மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளி போன்ற விதிகளை கடைப்பிடிக்க மாட்டார்கள் என்ற அச்சம் காரணமாக, பேரணிகளுக்கு அனுமதியளிக்கமுடியாது என நீதிமன்றம் ஒன்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.