பிரித்தானியாவில் 50 வயதுக்குட்பட்ட மக்களுக்கு மறுக்கப்படும் 3-வது டோஸ் தடுப்பூசி! குழப்பத்தால் அதிகரிக்கும் ஆபத்து!
பிரித்தானியாவில் தகவல்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதால் ஏற்பட்ட குழப்பத்தினால், 'ஆபத்தில் இருக்கும்' 50 வயதுக்குட்பட்ட மக்களுக்கு தடுப்பூசி மறுக்கப்பட்டுவருவதாக தெரியவந்துள்ளது. இதனால், நூற்றுக்கணக்காக மக்களின் உயிருக்கு ஆபத்து அதிகரித்துள்ளது.
பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பல தனிநபர்கள் தங்களுக்கான முதல் இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்திய பிறகும் அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பு முழுமையாக செயல்படவில்லை என்று கண்டறியப்பட்டது.
அதேநேரம், தொடர்ந்து மூன்றாவது தடுப்பூசியையும் செலுத்தினால் கோவிடிற்கு எதிரான பாதுகாப்பு நோயெதிர்ப்பு சக்தியானது 60 சதவிகிதத்தில் தூண்டபடுவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து, புற்றுநோய் நோயாளிகள் அல்லது உடல் உறுப்பு தானம் பெறுபவர்கள் போன்ற பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட, சுமார் 500,000 பேர் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற வேண்டும் என்று அமைச்சர்கள் கடந்த மாதம் ஒரு முடிவை எடுத்தனர்.
அந்த தடுப்பூசியை 'மூன்றாவது முதன்மை டோஸ்' (Third Primary Dose) என விவரித்தனர்.
ஆனால் சில பொது மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஆலோசகர்கள் - இந்த திட்டத்தை பற்றி அறியாதவர்கள், செப்டம்பர் 14 அன்று அறிவிக்கப்பட்ட 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான மூன்றாவது 'பூஸ்டர்' தடுப்பூசி (third 'booster' shot) செலுத்தும் பிரச்சாரத்துடன் குழப்பமடைந்துள்ளனர்.
இதன் விளைவாக, நூற்றுக்கணக்கான 'ஆபத்தில் உள்ள' 50 வயதிற்குட்பட்டவர்கள் தங்களுக்கு மூன்றாவது டோஸ் இருக்காது என்று தவறாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், செப்டம்பர் 2-ஆம் திகதியே பிரித்தானியாவின் பொது மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிபுணர்களுக்கு 'மூன்றாவது முதன்மை டோஸ்' பற்றி NHS கடிதங்கள் அனுப்பப்பட்டன.
ஆனால் பலர் இன்னும் தகுதியான நோயாளிகளுக்கு அழைப்புகளை அனுப்பவில்லை என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், NHS இங்கிலாந்து மருத்துவர்களுக்கு அவசர பின்தொடர்தல் கடிதத்தை அனுப்பியுள்ளது. அதில் நாளைக்குள் தகுதி உடைய மக்களுக்கு அழைப்பிதழ்களை அனுப்புமாறு அறிவுறுத்தியுள்ளது.