கணவன் - இரண்டாவது மனைவி கழுத்தறுத்து கொலை; முதல் மனைவி புகார்
சென்னை அருகே கொளப்பாக்கம் பகுதியில் மர்ம நபர்கள் கணவன் மனைவி கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர். பொலிஸார் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாம்சன் தினகரன் (63). இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் டைம் கீப்பராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவருக்கு இரண்டு மனைவிகள் - முதல் மனைவி ஆலிஸ் (52) இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இரண்டாவது மனைவி ஜனத் (52) இவருக்கு குழந்தைகள் இல்லை.
முதல் மனைவி மகன் மகளுடன் கூடுவாஞ்சேரியில் வசித்து வருகின்றனர். சாம்சன் தினகரன் இரண்டாவது மனைவியுடன் வண்டலூர் கொளபாக்கத்தில் வசித்து வந்தார். ஜனத்திற்கு 2 வீடு உள்ளது.
ஆலிஸ் மற்றும் ஜனத் இருவரும் அன்றாடம் போனில் பேசிக்கொள்வார்கள். வழக்கம்போல் சனிக்கிழமை முதல் மனைவி போன் செய்துள்ளார். ஆனால் யாரும்போனை எடுக்கவில்லை என்பதால் பக்கத்து வீட்டிற்கு போன் செய்து பார்க்கும்படியாக கூறியுள்ளனர் வீடு திறந்து கிடந்துள்ளது, உள்ளே சென்று பார்த்தபோது யாரும் இல்லை என்று கூறியுள்ளனர்.
இதனையடுத்து, இந்த தம்பதியருக்கு சொந்தமான அருகிலிருந்த வீடு ஆறு மாதங்களாக பூட்டிக் கிடந்த நிலையில் இருந்தது. அந்த வீடு திறந்து இருப்பதாக தகவல் கூறியதை அடுத்து சனிக்கிழமை இரவு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஓட்டேரி ஆய்வாளர் அசோகன் இரண்டு வீட்டையும் நேரில் ஆய்வு மேற்கொண்டதை அடுத்து ஆறு மாதங்களாக பூட்டி கிடந்த வீடு சுத்தமாக கழுவிய நிலையிலும் மஞ்சள்தூள் தூவி கிடந்துள்ளது. சந்தேகம் அடைந்த காவல்துறையினர் மற்ற இடங்களை பார்த்தபோது சாம்சன் தினகரன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள தண்ணீர் தொட்டியில் சோதனை செய்தபோது அவரது இரண்டாவது மனைவி ஜனத்தும் கழுததறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் தொட்டியில் கொலையுண்டு கிடந்த ஜனத்தின் பிரேதத்தையும் சாம்சன் தினகரன் பிரேதத்தையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் டிஎஸ்பி அனுமனந்தன், இன்ஸ்பெக்டர் அசோகன் உள்ளிட்ட காவலர்கள் அப்பகுதிகளில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
ஆறு மாதங்களாக பூட்டிய வீடு எப்படி சுத்தமாக இருந்திருக்கும், இவர்கள் எப்படி வந்திருப்பார்கள் சொத்துக்காக கொலை நடந்திருக்கலாம் என பல்வேறு கோணங்களில் ஓட்டேரி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.