திருமணமான ஒன்றரை ஆண்டில் படுக்கை அறையில் தூக்கிட்டு இறந்த இளம் தாயார்: கண்ணீரில் குடும்பம்
கேரளாவில் மருத்துவ மாணவி ஒருவர் கணவர் வீட்டில் மர்மமாக இறந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் ஒரு மர்ம மரணம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இடுக்கி மாவட்டம் ஜெயபிரகாஷ் என்பவரின் மகள் 21 வயதேயான தன்யா என்பவரே கணவன் வேலைக்கு சென்ற வேளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் 29 அதிகாலையில் கணவன் அமல் பாபு(27) வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் படுக்கை அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் தூக்கிட்ட நிலையில் தன்யாவை மீட்டுள்ளனர்.
ஆனால் மருத்துவமனையில் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்துள்ளனர். அமல்- தன்யா தம்பதிக்கு 8 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது.
கடந்த 2019 நவம்பர் மாதத்தில் தன்யாவின் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது தன்யா கல்லூரி இறுதி ஆண்டு படித்துக்கொண்டு இருந்துள்ளார்.
திருமணத்திற்கு பின்னர் பல முறை கணவர் தம்மை துன்புறுத்துவதாக தன்யா பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். கணவரின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தும் உளவியல் ரீதியான துன்புறுத்தலுக்கும் இலக்கானதாக தன்யா தந்தையிடம் கூறியுள்ளார்.
இறப்பதற்கு முந்தைய நாள் கணவன் துன்புறுத்தியதாக கூறி தன்யா கவலை தெரிவித்த நிலையில், பெற்றோர் மகளை அழைத்து வர முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.
தன்யாவின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறிய அவரின் பெற்றோர், மகள் ஏற்கனவே துன்புறுத்தலுக்கு இலக்கானதாக கூறியிருந்ததை அடுத்து பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தன்யா கூறியிருந்தது உண்மை என தெரியவர, அமல் பாபுவை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தற்போது அமல் மீது தற்கொலைக்கு தூண்டியதாக மட்டுமே வழக்கு பதிந்துள்ளனர். மேலதிக விசாரணைக்கு பின்னர் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.