என் உயிர் அவளுக்கு மட்டும் தான்! கடைசி ஆசையை நிறைவேற்றுங்கள்- கடிதம் எழுதிவிட்டு கணவன் தற்கொலை
தமிழகத்தில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகேயுள்ள மருகால்தலை என்ற ஊரைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது 37). இவர் வீட்டிலேயே செல்போன் பழுது பார்க்கும் மெக்கானிக் ஷாப் நடத்திவந்தார்.
இவரது மனைவி சாரதா(வயது 35), இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி சாரதா நேற்று முன்தினம் உயிரிழந்தார், இதனால் மனமுடைந்த பரமசிவம், அன்றிரவே வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் வேதனையடைந்த உறவினர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தனர், விரைந்து வந்த அதிகாரிகள் பரமசிவத்தின் சடலத்தை கைப்பற்றியதுடன் விசாரணை நடத்தினர்.
அப்போது பரமசிவம் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அந்தக் கடிதத்தில் "நான் பரமசிவன், என் மனைவி சாரதா. அவள் இல்லை. நானும் இனி உயிர் வாழ மாட்டேன். எங்களது கடைசி ஆசை, எங்கள் இருவரையும் இணைத்து புதைக்க வேண்டும், எரிக்கக் கூடாது. எங்கள் இருவரையும் பிரிக்க வேண்டாம்.
என்றும் என் உயிர் அவளுக்கு மட்டும்தான். ஒரே இடத்தில் கைகோத்து புதைக்க வேண்டும். என் மனைவி தாலி அவள் கழுத்தில் இருக்க வேண்டும். அதை கழட்டக் கூடாது. என் சாவுக்கு நான் மட்டுமே காரணம். இப்படிக்கு பரமசிவன் சாரதா" என அந்க்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
மேலும், ஒரு ஹார்ட் வரைந்து அதில் 'சிவா சாரா லவ்' என அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சுசீந்திரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.