மனைவி விட்டுச் சென்ற சோகத்தில், பிறந்த நாளில் மூடிவைத் தேடிக்கொண்ட கணவன்
தமிழகத்தில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவன் தனது பிறந்த நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, குமனஞ்சாவடியை சேர்ந்தவர் ஜீவானந்தம் (22). பிளஸ் 2 முடித்துள்ள இவர் மதுரவாயல் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஆவடி அடுத்த கன்னியம்மன் நகரை சேர்ந்த கோமதி (24) என்ற என்ஜினீயரிங் பட்டதாரி பெண்ணை காதலித்து 2021-ல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இவர்கள் வீராபுரம் நந்தவனம் நகரில் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு ஜீவானந்தத்திற்கும், கோமதிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபித்துக்கொண்டு கோமதி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
Representative Image
இந்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) ஜீவானந்தத்திற்கு பிறந்த நாள் என்பதால் அவரை பார்க்க பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சென்றுள்ளனர். அப்பொழுது ஜீவானந்தம் வீட்டில் மின் விசிறியில் புடவையால் தூக்கில் பிணமாக தொங்குவதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி பொலிஸார் ஜீவானந்தம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் பிறந்த நாளில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.