அமெரிக்காவில் இந்திய பெண் ரகசிய தகனம்! கணவன் மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு
- இந்திய சீக்கிய பெண்ணான மன்தீப் கவுர் ஆகஸ்ட் 4 அன்று நியூயார்க்கில் தற்கொலை செய்து கொண்டார்.
- ஆண் குழந்தையை பெற்று தராததால் கணவனால் துன்புறுத்தப்பட்டதாக இறப்பதற்கு முன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார்.
அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட இந்திய பெண்ணை அவரது கணவர் ரகசியமாக தகனம் செய்துவிட்டதாக இந்தியாவில் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கணவனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை வீடியோக்களில் விவரித்த பின்னர் நியூயார்க்கில் தற்கொலை செய்து கொண்ட இந்தியப் பெண் மந்தீப் கவுரின் குடும்பத்தினர், உடலைக் கோர முயன்றபோதும் கணவர் அவரை தகனம் செய்ததாகக் கூறியுள்ளனர்.
'அப்பா மன்னிச்சுடுங்க..,' அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட இந்திய பெண்ணின் கடைசி வீடியோ!
உத்தர பிரதேசத்தின் பிஜ்னூரில் உள்ள கிராமத்தில் இருந்து பேசிய அவரது சகோதரர் சந்தீப் சிங், இந்திய அரசின் நடவடிக்கைகளில் குடும்பத்தினர் திருப்தி அடையவில்லை என்று கூறியுள்ளார்.
"அங்கு அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் அதை எப்படிச் செய்ய அனுமதிக்க முடியும்," என்று அவர் கேட்டார். மேலும், பஞ்சாபி மொழி பேசும் அமெரிக்காவைச் சேர்ந்த டிரக் ஓட்டுநர் ரஞ்சோத்பீர் சிங் சந்து (கணவர்) மீது வழக்குத் தொடர உதவி கோரினார்.
நியூயார்க்கில், 30 வயதான மந்தீப் கவுர் எனும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர், தனது கணவனின் பல ஆண்டுகால துன்புறுத்தலை தாங்கிக்கொள்ளமுடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆறு மற்றும் நான்கு வயதில் இரண்டு மகள்களுக்கு தாயான மந்தீப் கவுர், இறப்பதற்கு முன் வெளியிட்ட வீடியோவில், "ஒரு நாள் தனது பிரச்சினை தீரும் என்ற நம்பிக்கையில் அனைத்தையும் பொறுத்துக்கொண்டேன், எட்டு வருடங்கள் ஆகிவிட்டன; இப்போது என்னால் தினமும் அடிவாங்க முடியாது" என்று அழுது கொண்டே திரும்பத் திரும்ப கூறுகிறார்.
பஞ்சாபியில் பேசிய அவர், தனது கணவர் மற்றும் மாமியார் தன்னை தற்கொலை செய்து கொள்ள "வற்புறுத்தியதாக" குற்றம் சாட்டினார். "அப்பா, நான் சாகப் போகிறேன், தயவுசெய்து என்னை மன்னியுங்கள்" என்று அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.