திருமணநாளை மறந்த கணவனை ஆள் வைத்து அடித்து உதைத்த மனைவி!
இந்தியாவின் மும்பை நகரத்தில், திருமணநாளை மறந்த கணவனுக்கு படம் புகட்ட, மனைவி தன் குடும்பத்தினரை அழைத்து வந்து அடித்து உதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பொதுவாகவே பெண்களுக்கு தங்கள் காதலனோ கணவனோ தங்கள் பிறந்தநாள், திருமணநாள், என அவர்களது வாழக்கையில் மிக முக்கியமான நாட்களாக கருதப்படும் திகதியையும், சில நேரங்களில் சரியான நேரத்தையும் கூட நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அரசிப்படுவார்கள்.
முக்கியமாக திருமண நாளை தங்கள் கணவர்கள் மறந்துவிட்டால், மனைவிகளுக்கு கடும் கோபம் வரும். அப்படி ஒரு சம்பவம் மும்பையில் நடந்திருக்கிறது.
மும்பையில், கோவண்டி பகுதியில் வசிப்பவர் விஷால் (32). இவருடைய மனைவி கல்பனா. இருவரும் தனித்தனி இடங்களில் வேலை செய்து வருகின்றனர். இருவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
தகவல்களின்படி, அண்மையில் இந்தத் தம்பதியின் திருமணநாள் வந்திருக்கிறது. வேலையில் சற்று பிஸியாக இருந்த விஷால், தனது திருமணநாளை மறந்துவிட்டதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த கல்பனா, இது குறித்து விஷாலிடம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
அடுத்தநாள், விஷால் தனது இரு சக்கர வாகனத்தை கழுவிக்கொண்டிருந்தார். அந்நேரம் வேலைக்குச் சென்றுவிட்டு கல்பனா வீட்டுக்கு வந்தார். கணவனைப் பார்த்ததும் மீண்டும் திருமணநாளை மறந்ததைச் சுட்டிக்காட்டி அவரைக் கடுமையாகத் திட்டியதாகத் தெரிகிறது. இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கல்பனா தன்னுடைய சகோதரன், பெற்றோரை தொலைபேசியில் அழைத்து வரவழைத்துள்ளார்.
கல்பனாவின் சகோதரர் வந்து விஷாலுடன் சண்டையிட்டதோடு, அவரது இரு சக்கர வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளார்.
இந்தச் சண்டை காட்கோபரில் இருக்கும் விஷாலின் பெற்றோர் வீட்டுக்குத் தெரியவந்தது. விஷால் பெற்றோர் வீட்டில் கல்பனா, அவர் சகோதரர், பெற்றோர் வந்து பிரச்னை குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், அங்கும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. அவர்களுக்குள் பிரச்னை அதிகரித்தது.
கல்பனா கோபத்தில் தன்னுடைய மாமியாரை அடித்துவிட்டதாக்க கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர்.
இதையடுத்து விஷாலும், அவர் பெற்றோரும் காட்கோபர் காவல் நிலையம் சென்று புகார் செய்தனர். அதன் அடிப்படையில் பொலிஸார் கல்பனா, அவர் பெற்றோர், சகோதரனுக்கு எதிராக வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.