திருமணமான 6 மாதத்தில் மனைவி, கொழுந்தியாள், மாமியாரை கொடூரமாக கொன்ற வாலிபர்! விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் காரணம்
இந்தியாவில் திருமணமான 6 மாதத்தில் மனைவி, கொழுந்தியாள் மற்றும் மாமியாரை கொடூரமாக தாக்கி கொலை செய்த இளைஞனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் ராய்ச்சூரை சேர்ந்தவர் சந்தோஷி (47). இவருக்கு வைஷ்ணவி (25), ஆரதி (16) என்ற மகள்கள் இருந்தார்கள். வைஷ்ணவிக்கும், சாய் சவுரவ் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்திருந்தது.
திருமணத்திற்கு பின்பு சாய் மற்றும் வைஷ்ணவி தனியாக வசித்து வந்தனர். கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கணவர் சாயுடன் வாழ பிடிக்காமல் ராய்ச்சூர் புறநகரில் உள்ள தாய் சந்தோஷி வீட்டில் வைஷ்ணவி வசித்து வந்தார்.
மேலும் சாயிடம் இருந்து நிரந்தரமாக பிரிய விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மனைவி வைஷ்ணவியை பார்க்க மாமியார் சந்தோஷி வீட்டுக்கு சாய் வந்திருந்ததாக தெரிகிறது.
இரவில் வீட்டில் வைத்து வைஷ்ணவிக்கும், சாய்க்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சாய் வீட்டில் கிடந்த அரிவாளால் வைஷ்ணவியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. மேலும் மகளை காப்பாற்ற வந்த சந்தோஷியையும் சாய் வெட்டியதாக தெரிகிறது.
அத்துடன் கொழுந்தியாள் ஆரதியையும் சாய் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில், 3 பேரும் பலத்த வெட்டுக்காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். உடனே அங்கிருந்து சாய் தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பொலிசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தன்னுடன் வாழ பிடிக்காமல் பிரிந்து வாழ்ந்ததால் உண்டான பிரச்சினையில் மாமியார், மனைவி மற்றும் கொழுந்தியாளை சாய் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட சாயை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருமணமான 6 மாதத்தில் சாய் மூவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.