அவள் கழுத்தில் காயம் இருந்தது! சகோதரரை அதிர்ச்சியடைய வைத்த காட்சி...2 உயிர்கள் பறிபோன சம்பவம்
புதுச்சேரியில் மனைவியை கொலை செய்த கணவர் பின்னர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்தவர் தனசேகர் (43). கார் டிரைவர். இவரது மனைவி சந்திரகுமாரி (35). இவர்களுக்கு பவானி (15) என்ற மகளும், தார்கேஷ் (13) என்ற மகனும் உள்ளனர்.
கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்தநிலையில் சந்திரகுமாரியின் அண்ணன் சந்திரசேகரின் குழந்தைக்கு மயிலத்தில் காதணிவிழா நடந்தது.
இதற்காக தனசேகர், சந்திரகுமாரி மற்றும் குழந்தைகளை அழைத்து செல்ல சந்திரசேகர் நேற்று மாலை 3 மணி அளவில் லாஸ்பேட்டைக்கு வந்தார்.
அப்போது சந்திரசேகரிடம், தனசேகர், சந்திரகுமாரி ஆகியோர் குழந்தைகளை அழைத்து செல்லும்படியும், தாங்கள் பின்னால் வருவதாகவும் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு சந்திரசேகர் மயிலத்துக்கு சென்றார்.
பின்னர் நீண்ட நேரமாகியும் தனசேகரும், சந்திரகுமாரியும் வரவில்லை. இதற்கிடையே விழா முடிந்தவுடன் சந்திரசேகர் மீண்டும் குழந்தைகளை தனசேகர் வீட்டில் விடுவதற்கு வந்தார்.
அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக மூடப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சந்திரசேகர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது தனசேகர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அவரின் காலுக்கு அடியில் சந்திரகுமாரி பிணமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சந்திரசேகர் பொலிசுக்கு தகவல் தெரிவித்தார்.
மேலும் அவள் கழுத்தில் காயம் இருந்தது என சகோதரி குறித்து சந்திரசேகர் அங்கு வந்த பொலிசாரிடம் கூறிய நிலையில் பொலிசாரும் அதை உறுதிப்படுத்தினர்.
பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எனவே கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தனசேகர், சந்திரகுமாரியை கொலை செய்து விட்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.