தமிழகத்தில் காதல் மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவன்! மரண வாக்குமூலத்தில் கொடுத்த அதிர்ச்சி
தமிழகத்தில் காதல் மனைவியை கணவன் தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வரதட்சணை கேட்டு கொடுமை
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகேயுள்ள வழுதாவூரைச் சேர்ந்த ஓட்டுநர் முத்துக்குமரன்(30). சங்கீதா(24) என்ற பெண்ணை இவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான முத்துக்குமரன், தினமும் குடித்துவிட்டு மனைவி சங்கீதாவுடன் சண்டையிட்டு வந்துள்ளார். மேலும், வரதட்சணை வாங்கி வரும்படி மனைவியை தொந்தரவு செய்துள்ளார். இதற்கு முத்துகுமரனின் சகோதரி கலையரசியும் உடந்தையாக இருந்துள்ளார். ஆனால் சங்கீதா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் கடந்த 5ஆம் திகதி தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தற்கொலை செய்து கொள்வதாக சங்கீதா கூறியபோது, முத்துக்குமரன் பின்புறமாக வந்து மனைவியின் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீயிட்டு கொளுத்தியுள்ளார். சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பொய் வாக்குமூலம்
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன்பாக நீதிபதியிடம் மரண வாக்குமூலம் அளித்தார். அதில், தனது குடும்பத்தினர் பற்றி கூறிய சங்கீதா, மண்ணெண்ணெயை எடுத்து ஸ்டவ்வை பற்ற வைக்க முயன்றபோது கீழே கொட்டியதால், எதிர்பாராத விதமாக சேலையில் தீ பற்றி விபத்து ஏற்பட்டதாக கூறினார்.
மேலும், தனது கணவருக்கும் தனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அவர் மீது எந்த தப்பும் இல்லை என்றும் கூறினார். ஆனால் அவரது வாக்குமூலத்தில் நீதிபதிக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்போது சங்கீதாவின் குடும்பத்தினர் நீதிபதியிடம் உண்மையை கூறுமாறு கெஞ்சியுள்ளனர்.
மரண வாக்குமூலம்
அதனைத் தொடர்ந்து சங்கீதா உண்மையில் நடந்த சம்பவத்தை வாக்குமூலமாக அளித்தார். அவரது வாக்குமூலத்தில், 'என் கணவர் வரதட்சணை கேட்டு என் அப்பாவை தொந்தரவு செய்து வந்தார். என்னையும் இழுத்துப்போட்டு அடிப்பார். தீபாவளி முடிந்த நாள் முதல் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் நான் மண்ணெண்ணெயை ஊற்றி கொளுத்தி கொள்ளப்போவதாக கூறினேன்.
உடனே அவர் மண்ணெண்ணெயை எடுத்து வந்து நிஜமாகவே பின்பக்கமாக வந்து ஊற்றி என்னை கொளுத்திவிட்டார். பின் தண்ணீரில் என்னை தூக்கி வீசினார்.
அதன் பின்னர் நான் ஆம்புலன்சில் சென்றுகொண்டு செல்லப்பட்டபோது, என்னை திட்டிக்கொண்டே வந்த அவர், உண்மையை கூறினால் உன்னை கொளுத்தியது போல் பசங்களையும் கொளுத்திடுவேன் என்று மிரட்டினார். அதனால்தான் நான் பயந்துகொண்டு யார்கிட்டேயும் உண்மையை கூறவில்லை. இதுதான் நடந்த உண்மை' என தெரிவித்தார்.
வரதட்சணை பிரச்சனையை மறைக்க மனைவியை கணவன் தீயிட்டு கொளுத்திய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.