பரபரப்பை கிளப்பிய ஹரி- மேகன் பேட்டி: அந்தர் பல்டியடித்த ஓபரா வின்ஃப்ரே
இளவரசர் ஹரியும் மேகனும் ஓபரா வின்ஃப்ரேக்கு அளித்த பேட்டி, ராஜ குடும்பத்துக்குள் பெரும் பிளவையும் பிரித்தானியாவில் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்திய நிலையில், மேகன் இவ்வளவு வெளிப்படையாக பேசுவார் என எதிர்பார்க்கவில்லை என ஒரேயடியாக அந்தர் பல்டியடித்துள்ளார் ஓபரா வின்ஃப்ரே.
தன் மகன் ஆர்ச்சி பிறக்கும்போது அவனது தோலின் நிறம் எப்படி இருக்கும் என்பது குறித்து ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியதாக மேகன் கூறியபோது, தான் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார் ஓபரா.
ஒரு கணம் தான் ஆச்சரியத்தில் வாய் பிளந்துவிட்டதாகவும், திகைத்துப்போய் மௌனமாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் அவர். ஓபரா, என்ன? என அதிர்ச்சியில் வாய் பிளக்கும் மீம்கள் பல அந்த பேட்டியைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
என்ன, அவ்வளவு தூரம் போகிறீர்களா? அவ்வளவு ரகசியமான விடயங்கள் குறித்து பேசப்போகிறீர்களா என தான் மனதுக்குள் ஆச்சரியப்பட்டதாக தெரிவித்துள்ளார் ஓபரா.
பேட்டிக்கு முன் தான் ஹரியையும் மேகனையும் சந்திக்கவில்லை, வெறும் குறுஞ்செய்திகள் மட்டுமே அனுப்பினேன் என்று கூறியுள்ள ஓபரா, முடிந்தவரை உண்மையைக் கூறவேண்டும் என்றுதான் அவர்கள் விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஹரி மேகனுடனான அந்த பேட்டி இந்த அளவுக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தும் என தான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளார் அவர்.
தன் பங்குக்கு இப்படிக் கூறி கையைக் கழுவிவிட்டார் ஓபரா... ஆனால், இளவரசர் பிலிப் உடல் நலமின்றி மருத்துவமனையில் இருந்தபோது வெளியான அந்த பேட்டி ராஜ குடும்பத்துக்குள் ஏற்படுத்திய பிளவு, ஹரி தனது தாத்தாவின் இறுதிச்சடங்குக்கு வந்து சென்றபின்னரும் சரியானதாக தெரியவில்லை!