இப்போதுதான் சொந்த நாட்டிலிருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது... ஜேர்மனியின் அறிவிப்பால் பல மில்லியன் வெளிநாட்டவர்கள் மகிழ்ச்சி
குடியுரிமை சட்டங்களை மாற்றுவது தொடர்பாக ஜேர்மனி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு வெளிநாட்டவர்கள் மீது எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்...
ஜேர்மனி இரட்டைக்குடியுரிமையை அனுமதிப்பது தொடர்பாக திட்டமிட்டுள்ள விடயம், தங்கள் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என ஜேர்மனியில் வாழ்ந்து வரும் வெளிநாட்டவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.
பொதுவாகக் கூறினால், பலர் ஜேர்மனியில் குடியமர்வதையும், புதிதாக வாழ்க்கையைத் தொடங்குவதையும் குறித்து, இப்போது கூடுதல் நிம்மதியாக உணர்வதாகத் தெரிவித்துள்ளார்கள்.
2021 தேர்தலுக்கு முன், ஜேர்மனியில் பெரும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. 16 ஆண்டுகள் சேன்ஸலர் பதவியிலிருந்த ஏஞ்சலா மெர்க்கல் பதவியிலிருந்து விலகியதுடன், மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்றும் அறிவித்தார். SPD, Greens மற்றும் FDP ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்தன.
ஆனால், அந்த நேரத்தில், புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் ஜேர்மானியர்கள் மீது தேர்தல் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதைக் குறித்து பலரும் யோசிக்கவில்லை.
கூட்டணி அரசோ, யாரும் பெரிதாக எதிர்பார்க்காத நிலையில், புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவான திட்டங்களை அறிவிக்கத் தொடங்கியது. குடியுரிமை கோர எட்டு ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்திருக்கவேண்டும் என்ற விதியை ஐந்து ஆண்டுகளாக, சில விதிவிலக்குகளின் கீழ், மூன்று ஆண்டுகளாகக் கூட குறைப்பது முதல், இரட்டைக் குடியுரிமையை அனுமதிப்பது வரையிலான, ஜேர்மன் குடியுரிமை பெறுவதற்கு தடையாக உள்ள ஒவ்வொரு விடயங்களாக ஒழித்துக்கட்டுவது குறித்து, புதிய அரசு திட்டங்களை வெளியிடத் துவங்கியது.
இந்த குடியுரிமைச் சட்டங்களில் எப்போது மாற்றங்கள் செய்யப்படும் என்பது தெளிவாகத் தெரியாவிட்டாலும், அதற்கு இந்த ஆண்டிலேயே முன்னுரிமை அளித்து நிறைவேற்ற இருப்பதாக அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், அதில் தெளிவாகப் புரியும் விடயம் என்னெவென்றால், ஜேர்மனியில் குடியேற முடிவு செய்துள்ள பல மில்லியன் வெளிநாட்டவர்கள் வாழ்வில் இந்த குடியுரிமைச் சட்ட மாற்றம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதுதான்!
பலரும், தாங்கள் இப்படி ஒரு மாற்றத்திற்காக நீண்ட காலம் காத்திருந்ததாகவும், இந்த மாற்றத்தை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
ஜேர்மனியின் Karlsruhe என்ற நகரில் வாழ்ந்து வரும் Greg (47) என்பவர், தான் 15 ஆண்டுகளாக ஜேர்மன் குடியுரிமைக்காக காத்திருப்பதாகவும், இப்போது அது கிடைக்க இருப்பதால் தன மிகவும் மகிழ்ச்சியாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த குடியுரிமை சட்ட மாற்றம் தொடர்பாக The Local பத்திரிகை 300க்கு அதிகமானவர்களிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 72 சதவிகிதத்தினர், இந்த சட்ட மாற்றம் தங்கள் வாழ்வில் பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்கள்.
இந்த விடயம், முதல் தலைமுறை புலம்பெயர்ந்தோருக்கு மட்டுமின்றி பலருக்கும் பயனளிப்பதாக உள்ளதால், தனிப்பட்டமுறையில் தாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாக பலர் தெரிவித்துள்ளார்கள்.
பலர், ஜேர்மன் குடியுரிமைக்காக தங்கள் பழைய பாஸ்போர்ட்டை இழக்கவேண்டும் என்ற காரணத்துக்காகவே, ஜேர்மன் குடியுரிமை கோரும் விடயத்தை ஒத்திவைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்கள். தாங்கள் விட்டு வந்த நாட்டில் வாழும் தங்கள் உறவினர்களை சென்று சந்திக்கும் உரிமையை இழந்துவிடுவோமோ, தங்கள் தாய்நாட்டில் வாழும் வயதான பெற்றோர்களைக் கவனித்துக்கொள்ள இயலாமல் போய்விடுமோ என தாங்கள் பயந்திருந்ததாக ஏராளமானோர் தெரிவித்துள்ளார்கள்.
ஆய்வில் பங்கேற்றவர்களில், இதுவரை ஜேர்மானியர்களாகாதவர்களில் 78 சதவிகிதத்தினர், விதிகள் மாறியதும், தாங்கள் நிச்சயம் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்கள்.
Hamburgஇல் வாழ்ந்துவரும் Alex (65), இனி தான் இரண்டாம் தரக் குடிமகனாக உணரத் தேவையில்லை என்கிறார்.
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட அனைவருமே இந்த மாற்றம் தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறாவிட்டாலும், பெரும்பான்மையோர் தாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், இனி தங்களாலும் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்றும், மேலும் ஜேர்மன் மக்களுடன் ஒன்றிணைந்து வாழமுடியும் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.