vayu shakti 2026 - பாகிஸ்தான் எல்லை அருகே விமானப் படை பலத்தை காட்ட உள்ள இந்தியா
பாகிஸ்தான் எல்லை அருகே வாயு சக்தி 2026 என்ற வான்வழிப் போர்ப் பயிற்சியை IAF நடத்த உள்ளது.
vayu shakti 2026
வரும் பிப்ரவரி 27 ஆம் திகதி, பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் பகுதியில் மிகப்பெரிய வான்வழிப் போர்ப் பயிற்சியை இந்திய விமானப் படை(IAF) நடத்த உள்ளது.

vayu shakti 2026 என்ற பெயரில் நடைபெற உள்ள இந்த பயிற்சியில், இந்திய விமானப் படை(IAF) தனது இராணுவ வலிமையையும் மூலோபாய தயார்நிலையையும் வெளிப்படுத்தத் தயாராக உள்ளது.
இந்த ஆண்டில் இந்திய விமானப் படையின் பெரிய பயிற்சியாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் பங்குபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பங்குபெற்ற அனைத்து முன்னணி போர் விமானங்களும் வான் பாதுகாப்பு அமைப்புகளும் இதில் பயன்படுத்தப்படும்.
பங்குபெறும் விமானங்கள்
இவற்றில், ரஃபேல், Su-30 MKI, தேஜாஸ், மிக்-29, ஜாகுவார், மிராஜ்-2000 மற்றும் ஹாக் விமானங்கள் அடங்கும். உள்நாட்டு தாக்குதல் ஹெலிகாப்டரான பிரசாந்த் இதில் பங்குபெற்று, நேரடி பயிற்சியின் போது ராக்கெட்டுகளை ஏவ உள்ளது.

போர் விமானங்களுடன் கூடுதலாக, C-130J மற்றும் C-295 போன்ற நிலையான இறக்கை போக்குவரத்து விமானங்களும், பிரசாந்த், சினூக், Mi-17 உள்ளிட்ட ஹெலிகாப்டர் பிரிவுகளும், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்களும் ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்களும் பங்குபெறும்.

முதல் முறையாக, C-295 போக்குவரத்து விமானம் இந்த பயிற்சியின் போது இரவு நேர தாக்குதல் தரையிறங்கும் பயிற்சியை மேற்கொள்ளும்.
மேலும், C-130J சூப்பர் ஹெர்குலஸ் ஒரு குறுகிய ஓடுபாதையில் தரையிறங்கி, Garud கமாண்டோக்களை உருவகப்படுத்தப்பட்ட போர் மண்டலத்தில் களமிறக்கி, சில நிமிடங்களில் மீண்டும் புறப்படும். அந்த நேரத்தில் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் அந்தப் பகுதியை பாதுகாக்கும்.

MiG-21 IAF சேவையில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் முதல்முறையாக இதில் கலந்து கொள்ளாது.
இந்தப் பயிற்சியானது, உருவகப்படுத்தப்பட்ட போர்க்கால சூழ்நிலையில் நடத்தப்படும். இந்திய விமான படையின் ஒருங்கிணைந்த வான் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு (IACCS) மூலம் கண்காணிக்கப்படும். இது நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் விமான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க உதவுகிறது.
இந்தப் பயிற்சி குறித்து பாகிஸ்தானுக்கு NOTAM மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய விமானப் படை,. வான் பாதுகாப்பு அமைப்புகளை முழுமையாக செயல்படுத்தியுள்ளது.
தாக்குதல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளுக்காக IACCS முழு வான்வெளியையும் கண்காணிக்கும்.
ஆகாஷ் ஏவுகணை அமைப்பு, இராணுவத்தின் L-70 துப்பாக்கிகள், விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் ஆகியவை செயல்பாட்டுத் தயார்நிலையில் வைக்கப்பட்டு பல அடுக்கு வான் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சியைக் காண நட்பு நாடுகளின் தூதரகங்களில் இருந்து சுமார் 40 அதிகாரிகள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |