டெஸ்ட் ரத்தானதால் தொடரை கைப்பற்றியதா இந்தியா? ஐசிசி சொல்லும் விதிமுறைகள் என்ன? முழு விபரம்
இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்தான நிலையில், இந்த தொடரின் முடிவு எப்படி இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி, கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது.
குறிப்பாக, இந்திய அணியின் பயிற்சியாளரான ரவிசாஸ்திரி மற்றும் அணியின் பீல்டிங் பயிற்சியாளர், பந்து வீச்சு பயிற்சியாளர் ஆகியோருக்கு கொரோனா உறுதியானதால், இது இந்திய வீரர்களிடையே ஒரு வித பதற்றத்தை கொடுத்தது.
இதனால், இந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே நான்கு போட்டிகள் முடிந்துவிட்டதால், இந்திய அணி இந்த தொடரில் 2-1 என்று முன்னிலையில் உள்ளது.
அப்படி பார்த்தால், இந்திய அணி தான், இந்த தொடரைக் கைப்பற்றியதாக அறிவிக்க வேண்டும். ஆனால், இதுவரை இது பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஏனெனில் இது ICC-யின் கையில் தான் உள்ளது. ஐசிசி விதிமுறைகளின் படி, ஐந்தாவது டெஸ்ட் போட்டி கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டால் இரண்டு அணிகளுக்குமே புள்ளிகள் ஒதுக்கப்படாது.
இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். ஒருவேளை போட்டி கொரோனா காரணமாக ரத்து செய்யப்படாமல் இந்திய அணி தானாக வந்து விலகி இருந்தால் இங்கிலாந்து அணி ஐந்தாவது போட்டியில் வெற்றியாளராக அறிவித்து தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடியும்.
இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகமும், கொரோனா காரணமாக ரத்தாகவில்லை என்றும் இந்திய வீரர்களின் மன நிலை மற்றும் அணிக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே நிறுத்தப்பட்டதாக புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் விதிகளின்படி இரு அணிகளில் ஒன்று விலகினாலோ அல்லது இரு அணிகளும் சேர்ந்து போட்டியை ரத்து செய்தாலோ எந்தவித புள்ளியும் தரப்படாது என்றும், இதனால் இந்தியா வெற்றி பெற்றதாகவே அறிவிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.