ஜேர்மன் பொருளாதாரத்துக்கு புலம்பெயர்தல் அவசியம்... நிபுணர்கள் கூறும் நல்ல செய்தி
ஜேர்மனியில், ஜேர்மன் நாட்டவர்களாகிய பணியாளர்கள் பலர் ஓய்வு பெறும் வயதை எட்டிவரும் நிலையில், அடுத்த தலைமுறையோ முழுநேர வேலையில் ஆர்வம் காட்டவில்லை. ஆக, ஜேர்மன் பொருளாதாரத்தை சீரான நிலையில் வைத்திருக்க புலம்பெயர்தல் அவசியம் என்கிறார்கள் பொருளாதாரத்துறை நிபுணர்கள்.
ஜேர்மன் பொருளாதாரத்துக்கு புலம்பெயர்தல் அவசியம்...
ஜேர்மனியில் மட்டுமல்ல, பல ஐரோப்பிய நாடுகளில் பணியாளர்கள் பலர் ஓய்வு பெறும் வயதை எட்டிவருகிறார்கள். ஜேர்மனியில், பிறப்பு வீதம் குறைந்துவருகிறது. மேலும், அடுத்த தலைமுறையோ, பகுதி நேரப் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறது.
இளைய தலைமுறையினர், வேலை செய்யும் அதே நேரத்தில், குடும்பத்துடன் நேரம் செலவிடுவதும் அவசியம் என கருதுகிறார்கள். ஆகவே, முழு நேரப் பணி செய்ய போதுமான ஆட்கள் இல்லை.
Getty Images
எனவே, மருத்துவம், தொழில்நுட்பம் முதலான துறைகளில் மட்டுமல்லாது, நெசவு, பேக்கரி போன்ற பணிகளுக்கும் ஆட்கள் தேவைப்படுவதால், பணி வழங்குவோர் வெளிநாட்டுப் பணியாளர்களைத் தேடத்துவங்கியுள்ளார்கள்.
வெளிநாட்டுப் பணியாளர்கள் சந்திக்கும் தடைகள்
ஆனால், வெளிநாட்டுப் பணியாளர்கள் ஜேர்மனியில் பணி செய்வதற்கு பல தடைகளை எதிர்கொள்கிறார்கள். அவைகளில் முக்கியமானது மொழிப்பிரச்சினை. ஓராண்டுக்கு முன் இந்தியாவிலிருந்து ஜேர்மனிக்கு வந்தவர் அஜய் (Ajay Mauray).
மென்பொருள் துறையில் பணியாற்றும் அஜய், தான் ஜேர்மனி வந்தபோது ஆறு அல்லது ஏழு மாதங்களில் ஜேர்மன் மொழியைக் கற்றுக்கொள்ளலாம் என தான் நினைத்ததாகவும், ஆனால், ஓராண்டாகியும் தன்னால் மொழியைக் கற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், அதற்கு மேலும் சில ஆண்டுகள் ஆகும் என்றும் கூறுகிறார்.
அத்துடன், ஜேர்மனி புலம்பெயர்தல் விதிகளை நெகிழ்த்திவந்தாலும், இன்னமும் குறிப்பிட்ட பணிகளுக்கு என வெளிநாட்டவர்கள் ஜேர்மனிக்கு வருவது கடினமாகத்தான் உள்ளது.
எதிர்க்கும் வலதுசாரியினர்
இன்னொரு பெரிய பிரச்சினை, அதிகரித்துவரும் வலதுசாரிக் கட்சிகள். அவர்கள் புலம்பெயர்தலைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். அதனால், அகதிகள், புலம்பெயர்ந்தோர் அச்சத்தில் வாழும் நிலைமை கூட சில நேரங்களில் உருவாகிறது.
விடயம் என்னவென்றால், சமீபத்தில் வலதுசாரிக் கட்சிகள் வெற்றி பெற்ற மாகாணங்களுக்குத்தான் அதிக வெளிநாட்டுப் பணியாளர்கள்தேவைப்படுகிறார்கள். அரசியல் ரீதியாக அவர்கள் புலம்பெயர்ந்தோரை எதிர்த்தாலும், நடைமுறையில், அவர்கள் புலம்பெயர்தலை எதிர்த்தால், அவர்களுடைய மாகாண பொருளாதார வளர்ச்சி கண்டிப்பாக பாதிக்கப்படும் என்கிறார்கள் பொருளாதாரத்துறை நிபுணர்கள்.
ஆக, அவர்கள் உண்மை நிலையைப் புரிந்துகொள்ளும் பட்சத்தில், ஒருபக்கம் ஜேர்மன் மொழி கற்றுக்கொள்ளும் ஆர்வமும் திறமையும் கொண்ட புலம்பெயர்ந்தோருக்கும், மறுபக்கம், ஜேர்மன் பொருளாதாரத்துக்கும் நன்மை உண்டாகும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |