பிரித்தானியாவிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் நாடு கடத்தப்படும் அபாயம்... பிரித்தானியா இந்தியாவுக்கிடையிலான ஒப்பந்தத்தின் விளைவுகள்
பிரித்தானியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்றின் காரணமாக, பல்லாயிரக்கணக்கானோர் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படும் ஒரு நிலை உருவாகியுள்ளது.
அதே நேரத்தில், பிரித்தானியா அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்களையும், தகுதி வாய்ந்த இந்திய இளைஞர்களையும் ஏற்றுக்கொள்ளவும் உறுதியளித்துள்ளது.
பிரித்தானிய உள்துறைச் செயலர் பிரீத்தி பட்டேல் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இருவரும் கையெழுத்திட்ட The Mobility and Migration Agreement என்னும் அந்த ஒப்பந்தத்தின்படி, உரிய ஆவணங்களின்றி பிரித்தானியாவில் வாழும் இந்தியர்களை எளிதில் கண்டுபிடித்து நாடு கடத்த முடியும்.
பிரித்தானியாவில் 40,000 ஆவணங்களற்ற இந்தியர்கள் வாழ்வதாக கூறப்படும் நிலையில், உண்மையான எண்ணிக்கை 100,000 வரை இருக்கலாம் என உள்துறை அமைச்சகம் கருதுகிறது.
இதற்கிடையில், இதே ஒப்பந்தம் காரணமாக தகுதி வாய்ந்த இரு நாட்டு இளம் தொழில்துறையினரும் இரு ஆண்டுகள் பரஸ்பரம் இரு நாடுகளிலும் பணி செய்யும் வகையில் விசாக்கள் பெறவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
அத்துடன், அதிக அளவிலான இந்திய மாணவர்கள் பிரித்தானியாவில் கல்வி கற்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தைய தரவுகளின் அடிப்படையில், கடந்த ஆண்டில் மட்டும் 53,000க்கும் அதிகமான மாணவர்கள் இந்தியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு கல்வி கற்பதற்காக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.