வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மருமகளை கொன்று புதைத்த மாமியார் குடும்பம்
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மருமகளை கொன்று கழிவுநீர் வடிகாலில் குழி தோண்டி புதைத்த கணவர் வீட்டு குடும்பத்தினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மருமகள் கொலை
இந்திய மாநிலமான அரியானாவில், கடந்த 2023-ம் ஆண்டு அருண் என்பவர் தனு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்னர், திருமணமான சில நாட்களில் இருந்து தனுவை அருண் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இதனால், கடந்த ஓராண்டாக பெற்றோர் வீட்டில் தனு வசித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால், தனுவை மீண்டும் அருண் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
மேலும், தனுவை அவரது பெற்றோர் மற்றும் சகோதரியிடம் பேச அனுமதிக்கவில்லை. இந்நிலையில், ஏப்ரல் 23-ம் திகதி அன்று தனு வீட்டை விட்டு ஓடிவிட்டதாக மாமியார், தனு குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தனு குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் துணை காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்துள்ளனர்.
அதன்படி நடந்த விசாரணையில் தான் தனுவை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து கொன்று வீட்டின் அருகே பொதுப்பாதையில் புதிதாக அமைக்கப்பட்ட கழிவுநீர் வடிகால் புதைத்தது தெரியவந்துள்ளது.
பின்னர், தனுவின் கணவர், மாமனார், மாமியார், நெருங்கிய உறவினர் ஆகிய 4 பேரை பொலிஸார் கைது செய்தனர். மேலும், தனுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |