வெடிகுண்டு இருப்பதாக கூறி விமானத்தை தரையிறக்கச் செய்த சம்பவம்... பூதாகரமாகியுள்ள பிரச்சினை
விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொய் சொல்லி, போர் விமானங்கள் உதவியுடன் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரச்சினை பூதாகரமாகியுள்ளது.
ஞாயிற்றுக் கிழமையன்று, ஏதென்ஸிலிருந்து லிதுவேனியா நோக்கி சென்று கொண்டிருந்த Ryanair நிறுவன விமானம் ஒன்று பெலாரஸ் வான் வெளியில் பறந்துகொண்டிருந்தபோது, பெலாரஸ் நாட்டு போர் விமானம் ஒன்று அதை அணுகியது.
விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், உடனே அந்த விமானத்தை பெலாரஸ் நாட்டில் தரையிறக்குமாறும், மறுத்தால் விமானம் சுட்டு வீழ்த்தப்படும் என்றும் மிரட்டல் விடுக்கப்படவே, உடனடியாக அந்த விமானம் பெலாரஸ் நாட்டின் Minsk நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
திடீரென விமானத்தை போர் விமானம் ஒன்று தரையிறக்க உத்தரவிட்டதால், விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
விமானம் தரையிறங்கியதும், விமானத்தில் ஏறிய பெலாரஸ் பொலிசார், விமானத்திலிருந்த Roman Protasevich (26) என்ற இளைஞரையும் அவரது காதலியான Sofia Sapega என்ற இளம்பெண்ணையும் கைது செய்துள்ளனர்.
Protasevich பெலாரஸ் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு அந்நாட்டு அதிகாரிகளால் தேடப்பட்டு வந்தவர். அவர் லிதுவேனியாவில் தலைமறைவாக இருந்தார்.
அவர் அந்த விமானத்தில் இருப்பதை அறிந்துகொண்டதால் இப்படி அவர் நடுவானில் மடக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அவர்களை கைது செய்வதற்காகவே விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலி நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டதும் தெரியவரவே, இந்த சம்பவம் ஐரோப்பிய நாடுகளை கொந்தளிக்கச் செய்துள்ளது.
இந்நிலையில், பெலாரஸ் தூதருக்கு சம்மன் அனுப்பிய ஜேர்மனி, உடனடியாக ஆஜராக அவருக்கு உத்தரவிட்டுள்ளது. Ryanair விமானம் Minsk நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டதற்காக அளித்த விளக்கம் அர்த்தமற்றது என்று கூறியுள்ள ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Heiko Maas, விமானத்தில் என்ன நடந்தது, விமானம் தரையிறக்கப்பட்டபின் என்ன நடந்தது என்பதற்கான விளக்கம் எங்களுக்குத் தேவை என்று கூறியுள்ளார்.
அத்துடன் கைது செய்யப்பட்ட இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.